அதானி, அமித்ஷா, மணிப்பூர்.. போர்க்கோலம் பூண்ட காங்கிரஸ்- ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட்டு போராட்டம்!
டெல்லி: அதானி ஊழல், மணிப்பூர் வன்முறை, அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா விவகாரங்களை முன்வைத்து நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் அதானி ஊழல், மணிப்பூர் வன்முறை உள்ளிட்டவை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்பது இந்தியா கூட்டணி கட்சிகளின் வேண்டுகோள். இதற்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதனை அனுமதிக்க மறுத்து வருகிறது.

இந்த நிலையில் ராஜ்யசபாவில் நேற்று பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதானி ஊழல், மணிப்பூர் வன்முறை மற்றும் அமித்ஷா விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகைப் போராட்டம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை கூறுகையில், அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதானியின் ஊழல் மோசடிகள் குறித்தும், மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பிரதமர் மோடி நேரில் சென்று சந்திக்காதது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் இன்று (18.12.2024) சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஆளுநர் முற்றுகை போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.
முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்றார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications