2017 போல கோவாவில் குறட்டைவிட கூடாது... இப்போதே கூட்டணி ஆட்சிக்கு பேச்சுவார்த்தை நடத்தும் காங்.
பனாஜி: கோவா சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின் பாஜகவுக்கு எதிரான கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க தயார் என காங்கிரஸ் கட்சி அறிவித்து வருகிறது.
40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டசபைக்கு மே 14-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் கோவா சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் நேற்று வெளியாகின. 40 எம்.எல்.ஏக்களைக் கொண்ட கோவா சட்டசபைக்கு பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை.

கோவா எக்ஸிட் போல் முடிவுகள்
கோவா எக்ஸிட் போல் முடிவுகளில் பெரும்பாலும் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் கிடைக்காது என்றே கூறி உள்ளன. ஒரு சில எக்ஸிட் போல் முடிவுகள் பாஜக, காங்கிரஸுக்கு ஆதரவாகவும் உள்ளன. இதனால் கோவாவில் தொங்கு சட்டசபையா? குதிரை பேரங்கள் மூலம் ஆட்சி அமையுமா? என்கிற சூழ்நிலை உருவாகி உள்ளது. இது 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான போது இருந்த நிலையை அப்படியே பிரதிபலிக்கிறது.

2017-ல் நடந்தது என்ன?
2017 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. பாஜக 13 இடங்களில்தான் வென்றது. இதனால் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களையே ஆட்சி அமைகக் ஆளுநர் அழைப்பார் என காத்திருந்தது காங்கிரஸ். ஆனால் கோவா பார்வார்டு கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து தங்களுக்கு ஆட்சி அமைக்க 21 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் எனக் கூறியது பாஜக. இதனால் பாஜகவையே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். இது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

கோவா குறித்த எக்ஸிட் போல் முடிவுகள்
தற்போதைய எக்ஸிட் போல் முடிவுகளும் கூட பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு தலா 16 இடங்கள் கிடைக்கலாம் என கூறியிருக்கின்றன. அதேநேரத்தில் மகாராஷ்டிரவாதி கோமந்த் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு சில இடங்கள் கிடைக்கும் என்கின்றன இக்கருத்து கணிப்புகள். இதனால் 2017-ல் குறட்டைவிட்டு ஆட்சியை அமைக்க முடியாமல் போனது போல் இருக்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் முனைப்பாக இருக்கிறது. கோவா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ப.சிதம்பரம் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க அறிவுறுத்தி இருக்கிறார் என்கின்றன தகவல்கள்.

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி
அதாவது கோவா சட்டசபை தேர்தலுக்கு முன்னரே பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டியது. ஆனால் அத்தகைய ஒரு கூட்டணி அமையவில்லை. இதனால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை உடனே தொடங்க ப.சிதம்பரம் அறிவுரை வழங்கி உள்ளார். பாஜக எதிர்ப்பு கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவற்றுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளை காங்கிரஸ் மேற்கொள்ள இருக்கிறது.

திரிணாமுல் காங்.
கோவா குறித்து இதற்கு முன்னர் வெளியான கருத்து கணிப்புகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என கூறப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் சில இடங்களில் வெல்லும்; அனேகமாக கோவாவில் தீர்மானிக்கும் சக்தியாக- கிங் மேக்கராக திரிணாமுல் காங்கிரஸ் உருவெடுக்கும் என்பதை கோடிட்டுக் காட்டுகின்றன. இதனால் திரிணாமுல் காங்கிரஸை சமாதானப்படுத்துகிற முயற்சிகளை காங்கிரஸ் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications