10 ஆண்டுகள் கழித்து விவசாயிகளின் ஞாபகம்… காங்கிரசை கேலி செய்த பிரதமர் மோடி
ஜம்முகாஷ்மீர்:ஒவ்வொரு 10 ஆண்டுகள் கழித்து தான் விவசாயிகளை பற்றிய நினைவு... காங்கிரஸ் கட்சியினருக்கு வரும் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று ரூ.3,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக லடாக் பகுதியில் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டி அங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.
அதன்பின் ஜம்மு நகரில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விஜய்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:
அரசுகள் மறந்தன
நாட்டுக்கு அத்தியாவசியமான , உணர்வுப்பூர்வமான விஷயங்களை கடந்த காலத்தில் ஆட்சி செய்த அரசுகள் மறந்துவிட்டன. கர்தார்பூர் விஷயத்தை எடுத்துக்கொண்டால், அதில் முந்தைய அரசு கவனம் செலுத்தினார்களா, குரு நானக் தேவ் பிறந்த இடம் நமது தேசத்துக்கு சொந்தமானது, அதை தாரை வார்த்துவிட்டார்கள்.
கேலி செய்யும் எதிர்க்கட்சிகள்
ஒவ்வொருவருக்கு குடிமகனுக்கும் ஜன் தன் வங்கிக்கணக்கை உருவாக்கி கொடுத்திருக்கிறோம். ஆனால், அதை எதிர்க்கட்சிகள் கேலி செய்கின்றனர். ஆனால், ஜன்தன் வங்கிக் கணக்குகள் எப்படிப் பயன்படப்போகிறது இப்போது தெரியும்.
வங்கிக்கணக்கு
எதிர்காலத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக ஜன் தன் கணக்கில் சேர்க்கப்படும். ஏறக்குறைய ரூ.75 ஆயிரம் கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
இடைத்தரகர்கள் இல்லை
அதில் எந்த இடைத்தரகருக்கும் வேலையில்லை. முந்தைய அரசிடம் எந்த விதமான உதவியும் பெறாத கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு இப்போது நாங்கள் உதவி செய்கிறோம்.
வேளாண் கடன் தள்ளுபடி
விவசாயிகளுக்கு அறிவித்துள்ள வேளாண் கடன் தள்ளுபடியால் பலனில்லை, அது இடைத்தரகர்களுக்குத்தான் செல்லும் என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் 2008-09ம் ஆண்டு விவசாயிகளுக்கு வேளாண் கடன் தள்ளுபடியாக ரூ.6 லட்சம் கோடியை காங்கிரஸ் கட்சியினர் அறிவித்தார்கள்.
காங். ஏமாற்றியது
ஆனால், தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் மட்டுமே கடன் தள்ளுபடி செய்து, விவசாயிகளை ஏமாற்றினார்கள். மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் விசாரணை நடத்தியதில், 35 லட்சம் பேர் வரை தேவையில்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
ரூ.13க்கு காசோலை
மத்தியப்பிரதேச மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி அறிவித்தது. ஆனால் அங்கு என்ன நடந்தது தெரியுமா? விவசாயிகளுக்கு 13 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டது.
தேர்தல் வெற்றிக்காக
தேர்தலில் வெற்றிக்காகவே... பெறுவதற்காகவே விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்னும் விவகாரத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்துகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மக்களின் உணர்வுகளுக்கும், தேவைகளுக்கும் மதிப்பளிக்கவில்லை.
வேலைவாய்ப்புகள்
கலாச்சார ரீதியாக பின்நோக்கி சென்று இருப்பதாகவும், வரும் ஆண்டுகளில் அது சரி செய்யப்படும். மேலும், ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு போதுமான வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்று அவர் கூறினார்.