சோனியா குறித்து அமைச்சர் கிரிராஜ் விமர்சனம்-நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம்! டெல்லியில் தடியடி!
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் நிறம் குறித்து மிக மோசமாக விமர்சனம் செய்த மத்திய இணை அமைச்சர் கிரிராஜ்சிங்கை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். டெல்லியில் கிரிராஜ்சிங் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
பிரதமர் மோடி அரசில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ் சிங். பீகார் மாநிலம் பாட்னா அருகே ஹாஜிப்பூர் என்ற இடத்தில் நேற்று முன்தினம் அவர் பேசுகையில், ராஜீவ் காந்தி ஒரு நைஜீரிய பெண்ணை திருமணம் செய்து கொண்டிருந்தால், அவர் ஒரு வெள்ளை நிற பெண்மணியாக இல்லாது இருந்தால், காங்கிரஸ் கட்சி அவருக்கு தலைவர் பதவியைத் தந்திருக்குமா என கேள்வி எழுப்பினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு கிரிராஜ்சிங்கை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
இதனிடையே என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும் கிரிராஜ்சிங் கூறியிருந்தார். ஆனால் காங்கிரசார் இதை ஏற்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் டெல்லியில் உள்ள அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். அப்போது, கிரிராஜ்சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
கொந்தளித்துக் கொண்டிருந்த காங்கிரசார் கிரிராஜ்சிங் வீட்டுக்குள் நுழையவும் முயன்றனர். இதனைத் தடுக்க போலீசார் தடியடி நடத்தினார். இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
இதேபோல் கிரிராஜ்சிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
முன்னதாக கிரிராஜ்சிங்கை பா.ஜ.க. தலைவர் அமித்ஷா டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications