"காங். சர்க்கஸ் கூடாரத்து எம்.டி ராகுல்"- விமர்சித்த ராஜஸ்தான் எம்.எல்.ஏ சஸ்பென்ட்!!
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை காந்தியை சர்க்கஸ் கூடாரத்தின் எம்.டி. என மிகக் கடுமையாக விமர்சித்ததற்காக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வார்லால் சர்மா அக்கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு ராகுல், அவரது ஆலோசகர்கள்தான் காரணம் என்று காங்கிரசில் போர்க்கொடி தூக்கும் தலைவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கேரளா முன்னாள் அமைச்சர் ஒருவர், ராகுலை ஜோக்கர் என்று கடுமையாக விமர்சித்தார். இதனால் அவர் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இதேபோல் ராஜஸ்தான் மாநில காங்கிரசிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அம்மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏ.வான பன்வார்லால் சர்மா ராகுலுக்கு எதிராக நேற்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் தற்போதைய மோசமான நிலைக்கு ராகுல்தான் காரணம். அவரிடம் கொள்கையோ, தொலைநோக்கு பார்வையோ எதுவும் இல்லை. ராகுலும், அவரது ஆலோசகர்களும் கட்சியின் படுதோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு மக்களிடம் ஆதரவு இல்லை.
அவர் காங்கிரஸ் கட்சியின் சர்க்கஸ் கூடாரத்து எம்.டி.யாக இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதை புரிந்து கொண்டு, மகன் மீது கரிசனம் காட்டாமல் கட்சியை பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இது குறித்து பேசுவதால் கட்சித் தலைமை என்மீது நடவடிக்கை எடுக்கும். இப்போது உண்மையை சொல்வது முக்கியம் என்பதால் இதை கூறுகிறேன் என்றார்.
இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பன்வார்லால் சர்மா இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்.