ஹரியானா அடியால் கப்சிப்.. ஜார்க்கண்ட் தேர்தலில் காங்கிரஸுக்கு 29 சீட்தான்.. ஹேமந்த் சோரன் தடாலடி!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 29 இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என கறார் காட்டி வருகிறார் முதல்வரும், ஜார்க்கன்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரன். 2019-ம் ஆண்டு தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி ஏமாற்றமடைந்த போதும் ஹரியானா தேர்தலைப் போல பிடிவாதம் பிடிக்காமல் இதனை ஏற்க முன்வந்துள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 41 இடங்கள். ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் முடிவடைகிறது. இதனால் நவம்பர் 25-ந் தேதிக்கு பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என ஜேஎம்எம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

ஆனால் இந்திய தேர்தல் ஆணையமோ 81 இடங்களுக்கு நவம்பர் 13, நவம்பர் 20 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்; நவம்பர் 23-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணியும் எதிர்க்கட்சியான பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பாஜக அணியில் ஜேடியூ உள்ளிட்ட கட்சிகள் கணிசமான இடங்களைக் கேட்டு மிரட்டுவதால் அக்கட்சி திணறிக் கொண்டிருக்கிறது.
ஜேஎம்எம் கூட்டணியில் காங்கிரஸ் 33 இடங்களை எதிர்பார்த்தது. கடந்த தேர்தலில் ஜேஎம்எம் கட்சி 43 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் ஆர்ஜேடி 7 இடங்களிலும் போட்டியிட்டன. இதனால் இந்த முறை காங்கிரஸ் 33, ஆர்ஜேடி 9 இடங்களை எதிர்பார்த்திருந்தது.
ஆனால் ஜேஎம்எம் கட்சியோ காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 29 இடங்களைத் தான் ஒதுக்க முடியும் என கூறிவிட்டது. மேலும் ஜேஎம்எம் கட்சி 43 இடங்களில் போட்டியிடும் என்றும் ஆர்ஜேடிக்கு 5 இடங்களை ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த கூட்டணியில் வேறு சில கட்சிகள் இணைய இருப்பதால் அந்த கட்சிகளுக்கு 4 இடங்கள் ஒதுக்கலாம் என்கிற பார்முலாவை கொடுத்துள்ளாராம் ஜேஎம்எம் தலைவரும் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன். இதனை ஏற்கவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகள் தத்தளித்து வருகின்றனவாம்.
ஹரியானாவில் கூட்டணிக்கு முன்வந்த ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகளை காங்கிரஸ் புறக்கணித்தததால் காங்கிரஸ் பெரும் தோல்வியைத் தழுவியது என்கிற விமர்சனமும் இருக்கிறது. இதனால் ஜார்க்கண்ட் தேர்தலில் கூட்டணியை இழக்காமல் கிடைப்பதை ஏற்போம் என்கிற மனநிலையில் இருக்கிறதாம் காங்கிரஸ். இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications