டெல்லி கிரிக்கெட் சங்க விவகாரம்... அருண் ஜேட்லி பதவி விலகக் கோரி ராஜ்யசபாவில் இன்றும் அமளி
டெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதவி விலகக்கோரி ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சியினர் இன்றும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜேட்லி பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார். அது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்வதற்காகவே டெல்லி தலைமைச் செயலகத்தில் சிபிஐ சோதனை மேற்கொள்ளப்பட்டதாக புகார் கூறினார்.

இதனிடையே பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கீர்த்தி ஆசாத் இது தொடர்பாக அமலாக்கத்துறை, மற்றும் புலனாய்வுத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என பேசியது சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜகவைச் சேர்ந்த உறுப்பினரே குற்றம் சாட்டி இருப்பதால் ஜேட்லி உடனடியாக பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் கட்சி நேற்று கடும் அமளியில் ஈடுபட்டது.
இந்நிலையில், இன்று ராஜ்யசபா துவங்கியதும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமாரி செல்ஜா இந்த விவகாரத்தை எழுப்பிப் பேசினார். இதற்கு பதில் அளித்த அவைத் துணைத் தலைவர் பி.ஜே. குரியன், முன்னறிவுப்பு இன்றி அவை உறுப்பினர் ஒருவர் குறித்த விவகாரத்தை எழுப்பக் கூடாது என்றார். இதனால் ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications