காங். மூத்த தலைவர் என்.டி.திவாரி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய ராஜ்நாத் சிங்!
லக்னோ: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான என்.டி.திவாரியை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் திடீரென நேரில் சந்தித்துப் பேசியதுடன் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள என்.டி. திவாரி வீட்டிற்கு இன்று ராஜ்நாத்சிங் திடீரென சென்று சந்தித்துப் பேசினார். அப்போது என்.டி. திவாரியின் காலைத் தொட்டு வணங்கினார் ராஜ்நாத்சிங். இந்த சந்திப்பின் போது லோக்சபா தேர்தல் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
ராஜ்நாத்துக்கு ஆதரவு- திவாரி
பின்னர் செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங், முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தில் நான் எம்.எல்.ஏ.ஆனது முதல் தற்போது வரை என்.டி. திவாரியுடன் நட்புடன் இருக்கிறேன் என்றார்.
அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய என்.டி.திவாரி, எனது ஆதரவு ராஜ்நாத்சிங்குக்கு உண்டு என்றார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என்.டி.திவாரி, மூன்று முறை உத்தரப்பிரதேச முதலமைச்சராகவும், ஒரு முறை உத்தரகாண்ட் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர்.
ராஜிவ்காந்தி அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராகவும், ஆந்திர ஆளுநராகவும் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். அத்துடன் என்.டி.திவாரிக்கு இப்போதும் லக்னோவில் கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர்.
தற்போது லக்னோவில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ராஜ்நாத்சிங், என்.டி.திவாரியின் ஆதரவாளர்களை கவரும் வகையிலே திவாரியை சந்தித்து காலில் விழுந்து வணங்கியதாக கூறப்படுகிறது.