காங்கிரஸ் நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் ஜி.எஸ்.டி மசோதாவை ஆதரிக்க தயார் - ராகுல்
மும்பை: சரக்கு சேவை வரி மசோதாவில் மூன்று முக்கிய விஷயங்களில் மட்டுமே, பாஜகவுடன் நாங்கள் வேறுபடுகிறோம் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் மசோதாவை ஆதரிக்க தயார் என அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மும்பையில் மேலாண்மை கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார் ராகுல் காந்தி. அப்போது அவர் கூறியதாவது: எங்களது நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டால், பாராளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. மசோதாவை (சரக்கு மற்றும் சேவை வரி) ஆதரிப்போம். இதற்கு 15 நிமிடங்கள் கூட ஆகாது. இந்த மசோதாவை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். ஏறத்தாழ 7 ஆண்டுகளாக அந்த மசோதாவை பாஜக எதிர்த்தது. இது நிறைவேறுவதற்கு அருண் ஜேட்லி கூட முட்டுக்கட்டை போட்டார். குஜராத் முதல் அமைச்சராக ஆக இருந்த நரேந்திர மோடியும், இதனை அனுமதிக்கவில்லை.

அதிகபட்ச வரியின் மீது வரையறை விதிக்க நாங்கள் விரும்புகிறோம். இதுமட்டுமின்றி, விவாதத்துக்குரிய தீர்மானங்கள், நியாயமானதாகவும், நடுநிலையானதாகவும் இருத்தல் வேண்டும். ஜி.எஸ்.டி. மசோதா நன்மை நிறைந்தது என்பது எனக்கு தெரியும். பாராளுமன்றத்தை முடக்குவது காங்கிரசின் உத்தி அல்ல.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. விவசாய பிரச்சினை விவசாயிகளுக்கு மட்டுமின்றி, தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்.
விவசாயத்துறைக்கு நாம் ஆதரவு தெரிவித்தே ஆக வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால், விவசாயத்தின் மீதான தற்போதைய அரசின் அணுகுமுறை கவலை அளிக்கிறது. விவசாயத்தின் மீதும், விவசாயிகளின் மீதும் அரசு போதிய அளவில் கவனம் செலுத்தவில்லை.
கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து அரசியல்வாதிகள் விலகி இருக்க வேண்டும். கிரிக்கெட்டை கிரிக்கெட் வீரர்கள் தான் நடத்த வேண்டுமே தவிர, அரசியல்வாதிகள் அல்ல. இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications