ஹரியானாவில் பாஜகவுக்கு சிங்கிள் சீட் கூட கிடைக்க கூடாது.. வெறித்தனமான கூட்டணி வியூகத்தில் காங்கிரஸ்!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி பிரம்மாண்டமான 'இந்தியா' கூட்டணியை உயிர்ப்பிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்த போதும் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல பாஜகவால் பழிவாங்கப்பட்டு வரும் துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபியை கட்சியும் கூட்டணியில் இணைப்பதில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தீவிரமாக இருக்கின்றனவாம்.
ஹரியானாவில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

2019-ம் ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது 40 இடங்களைப் பெற்ற பாஜக, புதிய கட்சியான ஜேஜேபியின் 10 இடங்கள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஜேஜேபியை பாஜக கழற்றிவிட்டது. அத்துடன் ஜேஜேபியின் எம்.எல்.ஏக்கள் பலரையும் தற்போது வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது பாஜக.
தற்போதைய ஹரியானா தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அலை காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கிறது. ஆனால் களம் நமக்குதான் சாதகம் என்கிற மிதப்பில் இருப்பது என்கிற தவறை காங்கிரஸ் செய்ய தயாராக இல்லை. பாஜகவுக்கு எதிரான வாக்குகள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் ஒருங்கிணைத்தாக வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணிக் கட்சிகள் அத்தனையையும் வளைத்துக் கொண்டிருக்கிறது.
இத்தனைக்கும் வேட்பாளர்களை அறிவித்த நிலையிலும் ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சியுடன் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடும் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. குருஷேத்ரா லோக்சபா தொகுதிக்குட்பட்ட அத்தனை சட்டசபை தொகுதிகளையும் ஆம் ஆத்மி கேட்பதுதான் சிக்கலாக இருந்து வருகிறதாம்.
இன்னொரு பக்கம் சமாஜ்வாதி கட்சியுடனும் காங்கிரஸ் பேச்சுகளை நடத்தி வருகிறது. ஆம் ஆத்மி ஏற்கனவே ஜேஜேபி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. இதனால் காங்கிரஸ்- ஆம் ஆத்மி- சமாஜ்வாதி கட்சி- ஜேஜேபி எனும் பிரம்மாண்ட கூட்டணி ஹரியானாவில் உருவெடுக்கலாம் என கூறப்படுகிறது. இது பாஜகவுக்கு கிடைக்கக் கூடிய சொற்ப இடங்களையும் இந்த கூட்டணி அலை அடித்துச் செல்லும் சூழ்நிலையை உருவாக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications