ராகுல் காந்தியுடன் திருமணமா? தீயாய் பரவிய செய்தி பற்றி உ.பி காங். எம்எல்ஏ அதிதி சிங் பதில்
ராகுல் காந்தியுடன் திருமணம் என்கிற செய்தி தன்னை வருத்தப்படச் செய்துள்ளதாக உ.பி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
Recommended Video
ரேபரேலி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்கிற வதந்தி தன்னை பாதித்து உள்ளதாகவும், அவர் தனக்கு அண்ணன் போன்றவர் என்றும் உ.பி மாநில பெண் எம்.எல்.ஏ அதிதி சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் திருமணம் குறித்தான வதந்திகள் சமூகவலைத்தளங்களில் வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் தற்போது புதிதாக வந்துள்ள வதந்தியை காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ மறுத்துள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியின் பெண் எம்.எல்.ஏ அதிதி சிங். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் புதுமுகமாக ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த சில தினங்களாக, சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கும், அதிதி சிங்குக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதுதொடர்பாக சோனியா காந்தியுடன் அதிதி சிங்கின் குடும்பத்தினர் சந்தித்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிதி சிங், கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்தி தன்னை மிகவும் பாதித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனக்கு மூத்த அண்ணன் போன்றவர் என்றும், அவருக்கு நான் ராக்கி எல்லாம் கட்டி இருக்கிறேன். ஆனால், இப்படி ஒரு வதந்தி பரப்பபடுவது தன்னை வேதனையில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.