பிரியங்கா… கட்சியைக் காப்பாத்து: காங். தலைமையகத்தில் தொண்டர்கள் கதறல்!
டெல்லி: பிரியங்கா... கங்கிரஸ் கட்சியைக் காப்பாத்துங்க... இதுதான் காங்கிரஸ் தொண்டர்களின் குரலாக இருக்கிறது.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ். மூன்று முறை தொடர்ந்து ஆண்ட காங்கிரஸ் கட்சி கடந்த 2013ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.
70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 இடங்களை மட்டுமே கடந்த முறை வென்றது. முதல்வர் வேட்பாளர் ஷீலா தீக்ஷித் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் படு தோல்வியை சந்தித்தார்.

இந்த நிலையில் 2014 லோக்சபா தேர்தலிலும் படு தோல்வியை சந்தித்தது காங்கிரஸ் கட்சி. அப்போதே காங்கிரஸ் தொண்டர்கள் விரக்தியடைந்தனர். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற ரட்சகர் வரமாட்டார்களா என்று கேட்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் டெல்லி சட்டசபைத் தேர்தலில் வரலாறு காணாத அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது காங்கிரஸ் கட்சி. போட்டியிட்ட 70 தொகுதிகளில் ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை. இதனால் வெறுப்பின் விளிம்புக்கே போன காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் போராட்டத்தில் குதித்தனர்.
காங்கிரஸ் தொண்டர்களின் தற்போதைய ஒரே நம்பிக்கை பிரியங்கா காந்தி. எனவேதான் கட்சியையும், நாட்டையும் காப்பாற்றுங்கள் பிரியங்கா என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
டெல்லியில் வாக்களித்த பின்னர் பேசிய பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி கட்சியையும், அர்விந்த் கெஜ்ரிவாலையும் தவிர்க்க முடியாது. ஆம் ஆத்மி கட்சி ஒரு முக்கிய போட்டியாளர்கள்தான் என்றும், ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஆம் அத்மியும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
காங்கிரஸ் கட்சி பல முறை கடினமான காலகட்டங்களை சந்தித்திருகிறது அதிலிருந்து எப்போதும் மீண்டும் வந்துள்ளது. இப்பொழுதும் மீண்டு வரும் என்றும் வாக்குப்பதிவு தினத்தன்று கூறினார்.
அவர் சொன்னதை விட சோகமான படுதோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது. எனவேதான் வெறுத்துப்போன தொண்டர்கள் பிரியங்கா காந்தி கட்சி தலைமை ஏற்க வேண்டும் என்று அழைக்கின்றனர்.
பிரியங்கா காந்தி அரசியலுக்கு வரவேண்டும் என்று நீண்டகாலமாகவே காங்கிரஸ் கட்சியினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் ராபர்ட் வதேராவை காதலித்த பிரியங்கா 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரைஹன் மற்றும் மிராயா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.
தற்போது கட்சித் தலைமை ஏற்கவேண்டும் என்று தொண்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தொண்டர்களின் அழைப்பினை பிரியங்கா ஏற்பாரா? காலம்தான் பதில் சொல்லும்.












Click it and Unblock the Notifications