கட்டாய விடுப்பில் சென்றுள்ளாரா ராகுல் காந்தி?- சர்ச்சையைக் கிளப்பும் பாஜக
டெல்லி: ராகுல் கலந்துகொள்ளச் சென்றுள்ளதாகக் கூறப்படும் "சார்லி ரோஸ்" மாநாடு கடந்த ஜூலை மாதமே நடைபெற்றுவிட்ட நிலையில், அவர் எதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்ற உண்மையை காங்கிரஸ் கட்சி மறைக்கிறது என்று பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், "கடந்த ஜூலை மாதம் நடந்து முடிந்துவிட்ட "சார்லி ரோஸ்" மாநாட்டில் கலந்துகொள்ள ராகுல் தற்போது கால எந்திரத்தில் பயணித்து அமெரிக்கா சென்றுள்ளார் போலும்.

ராகுல் இந்தியாவை விட்டு வெளிநாடு சென்றுள்ளது குறித்து காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுக் கதை விடுகிறது. அதற்குச் சரியான காரணம் எதனையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. அதனையொட்டி காங்கிரஸ் கட்சி, ராகுலுக்கு கட்டாய விடுப்பு கொடுத்து அனுப்பியுள்ளது" என்றார்.
முன்னதாக ராகுல் காந்தி, ஒய்வெடுக்க லண்டன் சென்றிருப்பதாகவும், பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளிநாடு சென்றிருப்பதாகவும் தகவல்கள் உலா வந்த நிலையில் காங்கிரஸ் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா இதனைத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் அஸ்பென் நகரில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ராகுல் காந்தி சென்றிருப்பதாக கூறிய அவர், பயண நாட்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை. ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான வதந்திகளையும் சுர்ஜீவாலா மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications