மதமாற்றம் செய்வதுதான் அன்னை தெரசாவின் முக்கிய நோக்கம்! - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
அல்வார்: அன்னை தெரசாவின் பிரதான நோக்கம் மதமாற்றம் செய்வதுதான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
தன்னலமற்ற புனிதர் என்று போற்றப்படும் அன்னை தெரசா பற்றி இப்படி ஒரு கருத்தை முன்வைத்திருப்பது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் கிராமத்தில் தொண்டு நிறுவன விழா ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அதன் செயல்பாடுகளை வாழ்த்தி பேசினார்.

அப்போது, "தன்னலமற்ற நோக்கத்துடன் கொண்ட ஒரு செயலை செய்வது நல்லது. ஆனால் அன்னை தெரசாவின் செயல்பாடு, சேவை என்ற பெயரில் கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்வதைத்தான் அவர் செய்தார். அவரைப் பின்பற்றி பபல நிறுவனங்களும் மதமாற்றம் செய்தன. அதனால்தான் தெரசா மதிப்பிழந்து போனார்," என்றார்.
அவருடன் விழாவில் கலந்து கொண்ட எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் டி.ஜி.பி. பிரகாஷ் சிங், "அன்னை தெரசாவை விட நிறைய தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக மக்களுக்கு சேவை புரிந்தன. ஆனால் கிறிஸ்துவ அமைப்புகள், ஊடகங்கள்தான் அவரை பிரபலமாக்கி விட்டன," என்றார்.
கடந்த சில மாதங்களாகவே மதப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க வை சேர்ந்த சிலர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவை பெரும் கண்டனத்துக்குள்ளாகி வருகின்றன.
இதையடுத்து கிறிஸ்துவ தேசிய விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ‘‘இந்தியாவில் மத நம்பிக்கைகள் போற்றப்படும். எனது அரசு அனைத்து மதங்களையும் சம மதிப்புடன் நடத்தும். மத வெறுப்பைத் தூண்டி விடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதையும் மீறி, உலகமே போற்றும், மனிதாபிமானத்தின் அடையாளமாகக் கருதப்படும் அன்னை தெரசா பற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோசமாக கருத்துத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியையும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications