சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர திணறும் போலீஸ்! பின்னணி என்ன?
டெல்லி: இணையதள சேவை செல்போன்களிலும் கிடைக்கும் இக்காலகட்டத்தில், குற்றங்களும் அதிகரிக்கின்றன. தீவிரவாதிகளும் இணையதளத்தை பயன்படுத்தி மக்கள் மத்தியில் வெறுப்பை உமிழ்கின்றனர். ஆனால், சைபர் கிரைம்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர முடியாமல் தடுமாறும் நிலைதான் இந்தியாவில் உள்ளது இதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றியும், தீர்வு பற்றியும் பார்க்கலாம்.
ஐஎஸ்ஐஎஸ் என்ற ஒரு தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் நடத்திவரும் சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை மட்டும் 23 ஆயிரத்தை தாண்டும் என்கிறது உளவுத்துறை அறிக்கை. அல்கொய்தா உள்ளிட்ட பிற பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களையும் சேர்த்தால் இது பல மடங்கு விரிவடையும்.

இணையத்தின் சக்தி
140 வார்த்தைகளுக்குள் செய்தியை சொல்ல வேண்டிய கட்டாயம் கொண்ட டிவிட்டரை வைத்தே, பல நூறு பேரை ஐஎஸ்ஐஎஸ் தனது இயக்கத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. அப்படியானால் இணையத்தின் சக்தியை யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும்.

தண்டனை வேண்டும்
தீவிரவாதிகள் தொல்லை ஒருபக்கம் என்றால், பெண்களை சீண்டுவது, அடுத்தவர் பணத்தை மங்களம்பாடுவது என சைபர் கிரைம்களும் ஒருபக்கம் அதிகரித்து செல்கிறது. இந்த குற்றங்களை குறைக்க குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதே தீர்வாக இருக்க முடியும்.

நடைமுறையில் சிக்கல்
ஆனால் சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு தண்டனை பெற்றுத்தர நடைமுறையில் வழியில்லை என்பதே அதிர்ச்சிகர உண்மை. 90 விழுக்காடு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக காலரை தூக்கிவிட்டபடி கோர்ட் வளாகத்தில் இருந்து வெளியேறும் நிலைதான்.

14 வருடமாக போராட்டம்
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் பெங்களூரு. இங்கு சைபர் கிரைம் பிரிவு 2001ம் ஆண்டில் அதாவது சுமார் 14 வருடங்கள் முன்பு தொடங்கப்பட்டது. இதில் வேதனை என்னவென்றால், பெங்களூரு சைபர் கிரைம் பிரிவு பதிவு செய்த எந்த வழக்கிலும் குற்றவாளிகள் ஒருவர் கூட தண்டனை பெறவில்லை.

அமெரிக்காவிலிருந்து அலட்சியம்
"பெரும்பாலான இணையதள சேவை நிறுவனங்கள் அமெரிக்காவில் இருந்து செயல்படுபவை என்பதால், இந்தியாவில் பதிவாகும் வழக்குகளுக்கு உரிய ஒத்துழைப்பை அவர்களிடமிருந்து பெறமுடிவதில்லை. நமது வேண்டுகோள்களை அலட்சியத்தோடு பார்த்து, கண்டுகொள்ளாமல்விட்டு விடுகின்றனர். 8 வருடங்களாக ஒரு பதிலுக்காக காத்திருக்கும் வழக்குகளை கூட இந்திய போலீசார் எதிர்கொண்டுள்ளனர்" என்று நடப்பு நிலவரத்தை தெரிவித்தார் பெங்களூரு போலீஸ் அதிகாரி ஒருவர்.

கோர்ட்டில் கேஸ் நிற்பதில்லை
சைபர் கிரைம் வழக்குகளில் காலத்தின் தேவையை கருதி, போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிடுகின்றனர். ஆனால் இணையதள சேவை வழங்கும் நிறுவனம் ஆதாரங்களை கொடுக்காததால், குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க முடியாமல் விழிபிதுங்குகிறது போலீசாருக்கு. இதனால் சைபர் கிரைம் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது என்பது குதிரை கொம்பாகிவிட்டது.

தடை செய்து பதிலடி தாருங்கள்
இணையதள சேவை நிறுவனங்களுக்கு இந்தியா மிகப்பெரிய மார்க்கெட். ஆனால் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு மட்டும் தருவதில்லை. இந்த பிரச்சினையை போக்க, முரண்டுபிடிக்கும் இணையதள நிறுவனங்களை முற்றாக தடை செய்வது தீர்வாக இருக்கும் என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள்.

இஸ்ரேலுடன் கூட்டு
சைபர் கிரைம் விஷயத்தில் இந்தியாவும்-இஸ்ரேலும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இஸ்ரேல் சென்றபோது இதுகுறித்து முக்கியமான ஆலோசனைகள் நடந்துள்ளன. சைபர் குற்றவாளிகளை பிடிக்கவும், தண்டிக்கவும், இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. அது சரி.. ஒரு கை தட்டினால் ஓசை வராது.. இரு கைகள் இணையும்போது, இணையதள நிறுவனங்கள் பணிந்துதானே ஆக வேண்டும்.












Click it and Unblock the Notifications