மாஜி மத்திய அமைச்சர் வீட்டுக்குள் நடந்த கொலையில் குற்றவாளியை 'காட்டி கொடுத்த' காயம்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா வீட்டில் வேலைக்கார பெண்மணியின் கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக செல்ஜா வீட்டு சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான குமாரி செல்ஜாவின் வீடு டெல்லி சுனேரிபாக் பகுதியில் உள்ளது. இந்த வீட்டில் 42 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், கொலையான நபர், குமாரி செல்ஜாவின் வீட்டு வேலைக்கார பெண்மணியின் கணவன் சஞ்சய் (42) என்று தெரியவந்தது.
செல்ஜாவின் வீட்டு வளாகத்திலேயே வேலைக்காரர்களுக்கான குடியிருப்பும் உள்ளது. இங்குதான் சஞ்சய் மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இந்நிலையில், சஞ்சய் தலையில் படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தார். இரும்பு கம்பியால் தலையில் அடித்து அவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.
போலீசாரின் விசாரணையில், செல்ஜாவின் சமையல்காரர் அனில் யாதவ் (35) என்பவர்தான் கொலைகாரன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடியிருப்பை காலி செய்வது தொடர்பாக அனிலுக்கும், சஞ்சய்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறுதான் கொலைக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்.
அனில்யாதவ் கொலையாளி என்பதை அவரது முகத்தில் இருந்த காயம்தான் காட்டிக்கொடுத்துள்ளது. அதாவது, சஞ்சய்யை கொலை செய்ய அனில் முயன்றபோது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அனிலின் முகத்தில் சஞ்சய் கைநகங்கள் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் எப்படி ஏற்பட்டது என்ற போலீசாரின் கேள்விக்கு அனில் திரு,திருவென முழித்துள்ளார். தக்க வகையில் போலீசார் விசாரணை நடத்தியதும் உண்மை வெளியேவந்துள்ளது.
கொலை நடந்தபோது அனில் அணிந்திருந்த ஆடையில் ரத்தக்கறை இருப்பதையும் போலீசார் வழக்கில் ஆதாரமாக சேர்த்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் வீட்டுக்குள் கொலை நடந்திருப்பதும், கொலையாளி, அவரின் சமையல்காரராகவே இருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.