23 ஆண்டுக்குப் பிறகு கர்நாடக போலீஸ் அதிகாரியின் உயிரைப் பறித்த வீரப்பனின் தோட்டா
பெங்களூர்: சந்தனக் கடத்தல் வீரப்பன் வரலாற்றில் முக்கியச் சம்பவங்களில் ஒன்றான, ஹோகனேக்கல் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி காவல்துறை அதிகாரி ஒருவர் பெங்களூரில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது உடல் சுகவீனம் அடைய வீரப்பனின் துப்பாக்கியிலிருந்து இவரது உடலுக்குள் பாய்ந்து கடந்த 23 வருடமாக தங்கிப் போய் விட்ட தோட்டாதான் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது பெயர் சந்திரப்பா. உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்த சந்திரப்பாவுக்கு வயது 58. பெங்களூர் யஷ்வந்த்புராவில் உதவி ஆணையராக பணியாற்றி வந்தார்.
1990ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி ஹோகனேக்கல் பகுதியில் வீரப்பனும், அவனது கும்பலும் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தனர். அதில் உயிர் தப்பியவர்களில் ஒருவர்தான் சந்திரப்பா.

4 பேரைக் கொன்று மைசூர் மக்களுக்கு அறிமுகமான வீரப்பன்
ஹோகனேக்கல் சம்பவத்திற்குப் பின்னர்தான் மைசூர் மக்களுக்கு வீரப்பன் குறித்த பயமே பிறந்தது. அந்த அளவுக்கு பயங்கரமான தாக்குதல் சம்பவம் அது.

அருவியில் வைத்து கொலையான 4 அதிகாரிகள்
ஹோகனேக்கல் அருவிப் பகுதியில் வீரப்பன் கும்பல் நடத்திய அதிரடித் தாக்குதலில், சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெகன்னாத், திணேஷ், ராமலிங்கு, சங்கர் ராவ் ஆகியோர் உயிரிழந்தனர். சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திரப்பா, கிருஷ்ண அர்ஸ், ஸ்பெஷல் பிராஞ்ச் கான்ஸ்டபிள் மல்லண்ணா, டிரைவர் சேஷப்பா, வனக்காவலர் ஆகியோர் குண்டுக் காயங்களுடன் உயிர் தப்பினர்.

சந்திரப்பா வயிற்றில் பாய்ந்த 5 குண்டுகள்
இதில் சந்திரப்பாவின் வயிற்றிலும் தோள்பட்டையிலுமாக மொத்தம் 5 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. படுகாயம் காரணமாக பல மாதங்களுக்கு பணியில் சேர முடியாத அளவுக்கு அவர் பலவீனப்பட்டுப் போயிருந்தார்.

ஒரு குண்டை எடுக்கவே முடியவில்லை
அவரது உடலில் பாய்ந்த ஐந்து குண்டுகளில் நான்கு குண்டுகளை எடுத்து விட்டனர். ஒரு குண்டு மட்டும் கடைசி வரை எடுக்க முடியாமலேயே போனது.

உயிரைப் பறித்த ஒற்றைக் குண்டு
அந்த ஒற்றைக் குண்டுதான் சமீப காலமாக அவரது உடல் நலம் வெகுவாக பாதிக்கப்படக் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வீரப்பன் வேட்டையில் பிரபலமானவர்
இவர் மைசூர் மாவட்டம் கே.ஆர். காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தபோது வீரப்பன் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டார். இதனால் பிரபலமடைந்தார்.

பிக்னிக் போனபோது வீரப்பனிடம் சிக்கினர்
ஹோகனேக்கலுக்கு இவரும், 10 போலீஸாரும் பிக்னிக் போயிருந்தபோதுதான் வீரப்பன் கும்பலிடம் சிக்கினர். மொத்தம் 29 பேர் வந்து இந்த பத்து பேரையும் அப்போது தாக்கினர். வீரப்பனே இந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியிருந்தான்.

சினிமாவில் நடித்தவர்
சினிமாவிலும் இவர் நடித்துள்ளார். அதேபோல நிறைய நாடகங்களிலும் நடித்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications