கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து.. நிமிடத்திற்கு நிமிடம்.. தற்போது வரை நடந்தது என்ன? முழு விவரம்
கொல்கத்தா: சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்தில் சிக்கியது முதல் தற்போது வரை நடைபெற்று வந்துள்ள அடுத்தடுத்த நிகழ்வுகளை கீழ் காண்போம்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே உள்ள பாஹா நாகா பஜார் ரயில் நிலையத்தை நெருங்கிய போது விபத்தில் சிக்கியது. பெங்களூரில் இருந்து கொல்கத்தா சென்ற ரயில் தடம் புரண்டதாகவும் அந்த தடம்புரண்ட பெட்டிகள் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 7 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த பயங்கர விபத்தில் சுமார் 70 பேர் உயிரிழந்து இருக்காலாம் எனவும் 350 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து இன்று மாலை 7.20 மணியளவில் நடந்துள்ளது. விபத்து நடைபெற்றது முதல் தற்போது வரை நொடிக்கு நொடி நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்:
இரவு 7.20 மணிக்கு விபத்து: * கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவின் பாஹனகா ரயில் நிலையம் அருகே இன்று இரவு 7.20 மணி அளவில் விபத்துக்குள்ளானது.
* கோரமண்டல் விரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் மற்றும் ஒரு பாசஞ்சர் ரயில் விபத்தில் சிக்கியதாக ஒடிசா தலைமைச் செயலாளர் தெரிவித்தார். இருந்தாலும் விபத்து பற்றிய முழுமையான விவரம் வெளியாகவில்லை.
* விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஒடிசா மாநில மீட்புப்படை, தேசிய மீட்பு மற்றும் நிவாரணப்படைகள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
* மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒடிசா முதல்வருடன் பேசி நிலைமையை கேட்டறிந்தனர். மீட்பு மற்றும் நிவாரணப்பணியில் உதவுவதாக உறுதியளித்துள்ளனர்.
* ரயில்வே நிர்வாகம் உடனடியாக உதவி எண்களை அறிவித்துள்ளன.
* ஹவ்ரா: 033 - 26382217 | காரக்பூர்: 8972073925, 9332392339 | பலாஷோர்: 8249591559, 7978418322 | ஷலிமார் : 9903370746
* ரயில் விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை உள்பட சுமார் 800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
70 பேர் உயிரிழப்பு: * ரயில் விபத்து எதிரொலியாக கிழக்கு கடற்கரை ரயில்வே வழித்தடத்தில் வரும் பல ரயில்கள் ரத்து செய்யபப்ட்டுள்ளன.
* ரயில் விபத்தால் 70 பேர் உயிரிழப்பு மற்றும் 350 பேர் காயம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
* ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ₹10 லட்சம், பலத்த காயம் அடைந்தோருக்கு ₹2 லட்சம், லேசான காயம் அடைந்தோருக்கு ₹50,000 நிவாரணத்தை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
* ரயில் விபத்து நடந்த இடத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளார்;
* ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல்
* ரயில் விபத்து காரணமாக கோவை- மும்பை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.. பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க இருந்தார்.
* ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் 3 மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications