கொரோனாவால் கோமா நிலைக்கு சென்ற கர்ப்பிணி: பிரசவத்தில் பிறந்த இரட்டையர் எப்படி இருக்கிறார்கள்?
பர்பெச்சுவல் உகே, பர்மிங்காம் நகர மருத்துவமனையில், முடக்குவாத நோய் சிகிச்சை மருத்துவ ஆலோசகராக இருக்கிறார். இவருக்கு கடந்த மார்ச் மாதம் உடல் நலம் சரி இல்லாமல் போனது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டார். இதை ஆங்கிலத்தில் Induced Coma என்கிறார்கள்.
அந்த நேரத்தில் இவரது கருவில் இரட்டையர் சிசுக்கள் வளர்ந்து கொண்டிருந்தன, கடந்த ஏப்ரல் மாதம் 26 வாரங்களே ஆன இவருக்கு பிரசவம் நடந்தது. சிசேரியன் மூலம் நடந்த பிரசவத்தில் உகேவுக்கு இரட்டையர் ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
சொசிகா பால்மர் என்ற குழந்தை 770 கிராம் எடையும், அதன் சகோதரர் ஒசினாசி பாஸ்கல் 850 கிராம் எடையும் இருந்தது. ஆனால், பிரசவம் நடந்த பிறகும் குழந்தைகளின் தாய் உகே, அடுத்த 16 நாட்களுக்கு கோமா நிலையிலேயே இருந்தார்.
அந்த நிலையை விவரித்த உகேயின் கணவர் மேத்யூ, "கடக்கும் ஒவ்வொரு நாளும், என் மனைவி இறந்தவர்களில் ஒருவராக இருக்க மாட்டார் என நம்பிக் கொண்டு இருந்தேன், அந்த நாட்கள் மிகவும் பயமாக இருந்தன" என்றார்.
நாங்கள் ஒன்றாகவே வாழ்ந்தோம். எனவே அவள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதே சிரமமாக இருந்தது.
உகே, கோமாவில் இருந்து சுய நினைவுக்குத் திரும்பியதும் அவளுக்கு குழப்பமாக இருந்ததாகத்தெரிவித்தார்.
ஏற்கெனவே இரண்டு பிள்ளைகளுக்கு தாயான உகே, பிரசவத்துக்குப் பிறகு 2 வாரங்கள் கழித்து எழுந்த போது தன்னைச் சுற்றி இரட்டை குழந்தைகள் இருப்பதை பார்த்தார். அந்த காட்சிகளை அவரால் நம்ப முடியவில்லை.
மருத்துவமனை ஊழியர்கள், உகேவின் இரட்டைக் குழந்தைகளைக் காண்பித்தபோது, அதை அவரால் நம்ப முடியவில்லை.
116 நாட்களை மருத்துவமனையில் கழித்த பின், இரட்டைக் குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்துச் செல்ல அனுமதித்தார்கள். இப்போது நிலைமையை ஏற்றுக் கொண்ட உகே, உடல் அளவில் குழந்தைகள் இருவரும் மேம்பட்டு வருகிறார்கள் என்று கூறினார்.
இரட்டையர் குழந்தைகள், தங்கள் வாழ்வின் தொடக்கத்திலேயே சிரமமான பாதையைக் கடக்க வேண்டும் என நான் விரும்பவில்லை. தனது குழந்தைகள் பிறந்தவுடன் முதல் 2 வாரங்களுக்கு தன்னைப் பார்க்க முடியாமல் இருந்ததை நினைத்து வருந்துவதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் கடைசியில் எல்லாம் சிறப்பாக முடிவுற்றது மகிழ்ச்சி தருகிறது என்கிறார் உகே.
கமலா ஹாரிஸ்: இனவெறி, பாலியல் ரீதியாக விமர்சிக்கும் 3 குழுக்கள் - என்ன செய்தது ஃபேஸ்புக்?
சமீபத்தில் நடந்து முடிந்த அமரிக்க தேர்தலில், அந்நாட்டின் துணை அதிபராக தகுதி பெற்றுள்ள கமலா ஹாரிஸுக்கு எதிராக தனது தளத்தில் இனவெறி, வெறுப்புணர்வு மற்றும் பாலியல் ரீதியாக சில குழுக்களில் பதிவாகியிருந்த கருத்துகளை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியிருக்கிறது.
இது தொடர்பாக ஃபேஸ்புக்கின் கவனத்துக்கு கொண்ட சென்ற பிபிசி, கமலா ஹாரிஸுக்கு எதிராக விரும்பத்தகாத வகையில் அநாகரிக கருத்துகளை மூன்று குழுக்கள் தொடர்ச்சியாக பதிவிட்டு வருவதாக கூறியது.
பொதுவாக இதுபோன்ற கருத்துகள் தொடர்பான புகார்கள் தங்களுடைய கவனத்துக்கு வரும் முன்பே அவற்றில் 90 சதவீதத்தை நீக்கி விடுவதாக ஃபேஸ்புக் கூறுகிறது.
இந்த செய்தி குறித்து மேலதிகமாகத் தெரிந்து கொள்ள இந்த லிங்கை சொடுக்குங்கள்: https://www.bbc.com/tamil/global-54982714
---------------------------------
லக்ஷ்மி விலாஸ் வங்கி: இந்திய அரசின் புதிய திட்டம் நெருக்கடியை சமாளிக்க உதவுமா?
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடுக்கு இந்திய நிதியமைச்சகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி அளித்த பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, வாடிக்கையாளர்களின் முதலீடுகளையும் அந்த வங்கியில் வைத்துள்ள டெபாசிட்டுகளையும் பாதுகாக்கும் நோக்குடன், நவம்பர் 17 முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை அனைத்து சேமிப்பு, நடப்புக் கணக்கு ஆகியவற்றில் இருந்து அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் மட்டுமே எடுக்கலாம் என்று இந்திய நிதியமைச்சகம் அறிவித்திருக்கிறது.
இந்த 30 நாட்களில் வங்கியின் கடுமையான நிதி நிலைமை விவகாரத்தை கவனிக்க அதன் நிர்வாக அதிகாரியாக கனரா வங்கி முன்னாள் தலைவர் டி.என். மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஏதுவாக, லக்ஷ்மி விலாஸ் இயக்குநர்கள் வாரியக்குழு அதன் பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
விரிவாக படிக்க:லக்ஷ்மி விலாஸ் வங்கி: இந்திய அரசின் புதிய திட்டம் நெருக்கடியை சமாளிக்க உதவுமா?
'லவ் ஜிகாத்' சட்டத்தை அறிமுகப்படுத்தும் மத்திய பிரதேச அரசு - விதி மீறினால் 5 ஆண்டுகள் சிறை
லவ் ஜிகாத் சட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதனை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டம் அம்மாநில சட்டசபையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் சட்டப்பிரிவு 21 படி, ஒருவர் தான் தேர்ந்தெடுக்கும் நபர்களை திருமணம் செய்துகொள்ள உரிமை உண்டு.
இந்நிலையில் பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசம் லவ் ஜிகாத் சட்டத்தை கொண்டு வரவுள்ளது. தற்போது வரை 'லவ் ஜிகாத்' என்ற சொல்லாடல் இந்தய சட்ட அமைப்பில் கிடையாது.
விரிவாக படிக்க:'லவ் ஜிகாத்' சட்டம்: மத்திய பிரதேசத்தில் விதி மீறினால் 5 ஆண்டுகள் சிறை
உலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ்
தனியே இருக்கும் அந்த வெள்ளை ஒட்டகச்சிவிங்கி எப்போது எங்கு இருக்கிறது என்பதை வனத்துறை அதிகாரிகள் தெரிந்துகொள்ள, இது உதவும் என்று இயற்கைவள பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.
அரிதான ஒரு மரபணு நிலையால், வெள்ளை நிறத்தில் இந்த ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது.
கடந்த மார்ச் மாதத்தில் இதன் குடும்பத்தை வேட்டையாடுபவர்கள் கொன்றனர்.
இதே வெள்ளை நிறத்தில் இருந்த ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கியும், அதன் ஏழு மாத குட்டியும் கொல்லப்பட்டதை தொடர்ந்து, எழுந்த அச்சம் காரணமாக ஜிபிஎஸ் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க:உலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் - எதற்கு?
சூரரைப் போற்று படத்தில் கலாம் வேடத்தில் நடித்த ஷேக் மைதீன்: படம் பார்க்காமலே இறந்த சோகம்
சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வேடத்தில் நடித்தவர் ஷேக் மைதீன். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இவர் அப்துல் கலாமைப் போன்ற உருவ தோற்றம் இருப்பதால் பிரபலமடைந்தவர். இதனால், 'உடுமலை கலாம்' எனவும் அழைக்கப்பட்டவர்.
தாம் நடித்த படம் திரைக்கு வரும் முன்பாகவே மரணம் அவரைத் தழுவிக் கொண்டதால், அவருக்கு மிகவும் பிடித்தமான அப்துல் கலாம் தோற்றத்தில் தம்மை திரையில் பார்க்கும் அவரது ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது குடும்பத்தினர் உருக்கமாக கூறுகின்றனர்.
அப்துல் கலாமின் மீது தீவிர பற்றுக் கொண்ட ஷேக் மைதீன், கலாமின் அறிவுரைகளை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதில் தொடர்ந்து பணியாற்றி வந்ததாக தெரிவிக்கின்றனர் அவரது நண்பர்கள்.
விரிவாக படிக்க: சூரரைப் போற்று படத்தில் கலாம் வேடத்தில் நடித்த ஷேக் மைதீன்: படம் பார்க்காமலே இறந்த சோகம்
















Click it and Unblock the Notifications