அன்புமணி ராமதாஸ் மீதான ஊழல் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த சிபிஐ கோர்ட்
டெல்லி: மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது குறித்து சிபிஐ தொடர்ந்த வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்றம் வரும் மார்ச் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது உத்தரபிரதேசத்தில் ரோஹில்கந்த் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இந்தூரில் இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்திற்கு முறைகேடாக அனுமதி அளித்ததாக அவர் உள்பட 9 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அன்புணி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்ய உத்தரவிட்டது. இருப்பினும் இந்த வழக்கில் அன்புமணி மீது இதுவரை குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அன்புமணி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த சூழலில் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி சார்பில் கூறப்பட்டதாவது, சிபிஐ-இன் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மார்ச் 17ம் தேதி இறுதி விசாரணைக்கு வருகிறது.
அதனால் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications