காங்கிரஸும், ஊழலும் இரட்டை சகோதரிகள்: மோடி தாக்கு
தாவணகரே: காங்கிரஸும், ஊழலும் இரட்டை சகோதரிகள் என்று கர்நாடக மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகரேவில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

இரட்டை சகோதரிகள்
காங்கிரஸும், ஊழலும் இரட்டை சகோதரிகள். ஊழல் காங்கிரஸின் கருவில் இருந்து தான் பிறக்கிறது. காங்கிரஸ் ஜென்டில்மேனிடம் இருந்து ஒரு விவரத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் எத்தனை அமைச்சர்கள் சிறையில் உள்ளார்கள், எதற்காக உள்ளார்கள் என்பது தெரிய வேண்டும்.

பெப்பர் ஸ்ப்ரே
காங்கிரஸ் வழக்கமாக மக்கள் கண்ணில் அழுக்கை தூவும். ஆனால் தற்போது அது மிளகாய்ப்பொடியை தூவி உள்ளது.(லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி. லகடபாதி ராஜகோபால் தெலுங்கானா மசோதாவை எதிர்த்து பெப்பர் ஸ்ப்ரேயை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.)

போலி காந்திகள்
மகாத்மா காந்தி உயிருடன் இருக்கையில் காங்கிரஸ் கட்சி வேதாந்தமாக இருந்தது. ஆனால் எப்பொழுது போலி காந்திகள் வந்தார்களோ அதில் இருந்து காங்கிரஸ் கட்சியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பெண்கள் முன்னேற்றம்
பெண்கள் முன்னேற்றம் பற்றி கவலைப்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். அவர்கள் உண்மையாகவே பெண்களை பற்றி கவலைப்படுவதாக இருந்தால் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால் அவர்கள் நிம்மதியாக தூங்கவாவது செய்வார்கள் என்றார்.

எதியூரப்பா
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவை மோடி புகழ்ந்து பேசினார். அவர் எப்பொழுதெல்லாம் எதியூரப்பாவின் பெயரை உச்சரித்தாரோ அப்பொழுதெல்லாம் அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.












Click it and Unblock the Notifications