சிமி தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம் - அனைத்து மாநிலங்களுக்கும் உளவுத்துறை எச்சரிக்கை!
டெல்லி: கடந்தாண்டு மத்தியப் பிரதேச சிறையில் இருந்து தப்பியோடிய சிமி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
போலீசாரைக் கொலை செய்தது, கொலை முயற்சிகள், வங்கிக் கொள்ளைகள், மதங்களிடையே பதற்றத்தைத் தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் "சிமி' இயக்கத்தைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் கடந்த 2011ம் ஆண்டு கைது செய்யப் பட்டனர்.

மத்தியப் பிரதேசத்தின் கண்ட்வா நகரச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் அனைவரும் காந்த 2013ம் ஆண்டு தப்பி ஓடினர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள இவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த 5 தீவிரவாதிகளும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் உத்தரவுப்படி இந்தியாவில் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக மத்திய உளவுத் துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் அதிகாரி ஒருவருக்கும், பயங்கரவாதிகளைக் கையாளும் நபர் ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை இந்திய உளவு அமைப்பினர் ஒட்டுக் கேட்டதில் இந்தச் சதித் திட்டம் குறித்து தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த உரையாடலில், "அவர்களுக்கு (5 பயங்கரவாதிகள்) ஒரு முக்கியமான திட்டம் தரப்பட்டுள்ளது. சில தினங்கள் காத்திருங்கள்' என்று ஐ.எஸ்.ஐ. அமைப்பின் அதிகாரி கூறுவது இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
தப்பியோடிய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபடுமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளுக்கு பிரத்யேக எச்சரிக்கைத் தகவலை அனுப்பி உள்ள மத்திய அரசு, அம்மாநிலங்களில் தப்பியோடிய தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கிறது.
இந்த 5 பயங்கரவாதிகளில் குறைந்தபட்சம் 2 பேர் கடைசியாக கர்நாடகத்தில் இருந்ததை உளவுத் துறை கண்டறிந்ததாகவும், தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அவர்களது நடமாட்டம் காணப்பட்டதாகவும் உளவுத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தெலங்கானாவின் கரீம்நகரில் இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற வங்கிக் கொள்ளை, சென்னை சென்ட்ரலில் மே 1ஆம் தேதி இளம் பொறியாளர் கொல்லப்படக் காரணமான பெங்களூரு - குவாஹாட்டி ரயில் குண்டு வெடிப்பு, மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள ஃபாராஸ்கானா, விஷ்ராம்பாக் காவல் நிலையங்களில் ஜூலை 10ஆம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பு ஆகிய நாசவேலைகளில் இந்த தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே, மத்தியப் பிரதேச சிறையில் இருந்து தப்பியோடிய 5 பயங்கரவாதிகளில் ஒருவரான மெஹ்பூபின் தாய் நஜ்மா பீ சில மாதங்களுக்கு முன்பு கண்ட்வா நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டார். எனவே, அவர் தன் மகனுடன் பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரைக் கண்டு பிடிப்பதன் மூலம், தீவிரவாதிகளின் இருப்பிடத்தை எளிதாக கண்டறியலாம் என போலீசார் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications