கொரோனா கால கல்யாணம்.. பிபிஇ உடையுடன் அக்னியை வலம் வந்து திருமணம் செய்த மணமக்கள்
கொரோனா காலத்தில் திருமணம் செய்து கொள்வது கஷ்டமான விசயம்தான். பட்டுப்புடவை இன்றி ஷெர்வானி உடை அணியாமல் பிபிஇ பாதுகாப்பு உடையை அணிந்து திருமணம் செய்த மண மக்கள் அக்னியை வலம் வந்தனர்.
போபால்: பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்து மாலை சூடி அக்னியை வலம் வந்து திருமணம் செய்து கொண்டனர் இந்த கொரோனா தம்பதியர். இந்த திருமணத்தில் பங்கேற்ற உறவினர்களும் பிபிஇ உடை அணிந்து பங்கேற்றதுதான் சுவாரஸ்யம். மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் நகரில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்த திருமணம் எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று மண மக்கள் கனவு கண்டு இருப்பார்கள். என்ன கலரில் புடவை எடுப்பது என்பது தொடங்கி பூக்கள், மாலைகள் கூட பல வித டிசைன்களின் ஆர்டர் கொடுத்திருப்பார்கள்.
திருமண நாளில் எடுக்கும் புகைப்படங்களை ஆல்பமாக போட்டு அதை காலம் காலமாக பார்த்து ரசிப்பார்கள். சிலரது திருமணம் கால காலத்திற்கும் சொல்லும் படியாக அமைந்து விடுகிறது. கொரோனா காலத்தில் பல கட்டுப்பாடுகள் உள்ளதால் கோவில் வாசலில் தாலி கட்டி மாலை மாற்றி திருமணம் செய்து கொள்கின்றனர்.

மத்திய பிரதேச மணமகனுக்கு கொரோனா
மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் நகரத்தில் ஒரு ஜோடிக்கு ஏப்ரல் 25ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மணமகனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடந்த 19ஆம் தேதி முதல் மணமகன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

பிபிஇ உடையில் திருமணம்
திருமணத்தை வேறொரு நாளில் வைத்துக்கொள்ளலாம் என்று உறவினர்கள் தெரிவித்தாலும் மணமக்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. இருவரும். பாரம்பரிய திருமண உடைகளுக்கு பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்தனர். வேத மந்திரங்கள் முழங்க மணமகளின் கழுத்தில் தாலி கட்டினார் மணமகன்.

வலம் வந்த மணமக்கள்
திருமணத்தில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்களும் பிபிஇ உடை அணிந்திருந்தனர். போட்டோகிராபரும் முழு கவச உடை அணிந்திருந்தார். கைகளை கோர்க்காமல் மணமகளின் மேலே கையை வைத்துக்கொண்டு அக்னியை வலம் வந்தார். உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

காலத்திற்கும் மறக்க முடியாது
இந்த திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திருமண வீடியோ, போட்டோ ஆல்பங்களை காலத்திற்கும் பார்த்து கதை கதையாக பேசுவார்கள். கொரோனா காலத்தில் நடந்த திருமணங்கள் பல சுவாரஸ்ய கதைகளை தாங்கியுள்ளன. கேரளாவிலும் இதே போல கொரோனா பாதித்த மணமகனை பிபிஇ உடை அணிந்து கொண்டு மணப்பெண் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications