மாவோயிஸ்டுகள் மீதான தடையை நீக்க இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை!
விசாகப்பட்டினம்: மாவோயிஸ்ட்டுகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய- மாநில அரசுகள் நீக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.நாராயணன் கூறியதாவது:
இடதுசாரி தீவிரவாதத்தை இந்த அரசு சமூக- பொருளாதார பிரச்சனையாக கருதாமல் வெறும் சட்டம்- ஒழுங்கு சார்ந்த பிரச்சனையாக மட்டும் பார்த்து வருகிறது.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார குற்றங்களும், மதம் சார்ந்த வன்முறைகளும் இடதுசாரி தீவிரவாதத்தை விட அதிக ஆபத்தானவையாக உள்ளன.
'தோட்டாவுக்கு தோட்டா' என்ற சித்தாந்தத்தால் சில மாநிலங்களின் பல பகுதிகள் அமைதியற்றுக் கிடக்கின்றன. எனவே, மாவோயிஸ்ட்டுகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய- மாநில அரசுகள் நீக்க வேண்டும். நசுக்கப்பட்ட, ஏழை மக்களை உயர்த்திவிடும் நோக்கத்தில் பிறந்தது தான் இடதுசாரி தீவிரவாதம்.
இடதுசாரி தீவிரவாதத்தை ஒரு சமூக- பொருளாதார பிரச்சனையாக கருதி நிலங்கள் உள்ளிட்ட இதர முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்."
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications