நண்டு பிடிக்கச் சென்று புலிக்கு பலியான இளைஞர்... மேற்கு வங்கத்தில் தொடரும் சோகம்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நண்டு பிடிக்கச் சென்றவரை புலி இழுத்துச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், புர்பா குர்குரியா கிராமத்தைச் சேர்ந்த சிலர், அங்குள்ள சுந்தரவனக் காடுகளை ஒட்டியுள்ள ஜார்க்காலியா காட்டுப்பகுதியில் உள்ள ஒரு ஓடையில் படகில் சென்று நண்டு பிடித்துக் கொண்டிருந்தனர்.

மூன்று நாட்கள் தேவையான நண்டுகளைப் பிடித்த பின்னர், வீடு திரும்புவதற்காக அருகாமையில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு தங்களது படகை அவர்கள் நகர்த்திச் சென்றனர்.
அப்போது அருகில் இருந்த புதரில் பதுங்கியிருந்த புலி ஒன்று பாய்ந்து வந்து, சைலன் மாஜி(30) என்ற இளைஞரை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சைலனின் நண்பர்கள், கூச்சலிட்டபடி புலியை விரட்டிச் சென்றனர். ஆனால், அவர்களால் சைலனை காப்பாற்ற முடியவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இதேபோல், 24-வது வடக்கு பர்கானா மாவட்டத்தில், சுந்தரவனக் காடுகளை ஒட்டியுள்ள ஒரு ஓடையில் நண்டு பிடித்துக் கொண்டிருந்த புர்பா குர்குரியா கிராமத்தைச் சேர்ந்த பப்பா புனியா(22) என்ற வாலிபரை புலி இழுத்துச் சென்று, இரையாக்கிக் கொண்டது.
சைமனுடன் சேர்த்து கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் சுந்தரவனக் காட்டில் வாழும் புலிகளுக்கு 7 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications