காங்கிரஸ் பெண் பிரமுகர் கூந்தல் அறுப்பு விவகாரம் - கிரைம் பிராஞ்ச் விசாரணைக்கு உத்தரவு
திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் பெண் பிரமுகரின் கூந்தல் அறுக்கப்பட்டதாக வெளியான விவகாரத்தில் கிரைம் பிராஞ்ச் தனது விசாரணையை துவங்கியுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பாறசாலை பெருங்கடவிளை கிராம பஞ்சாயத்திலுள்ள கொல்லயில் வார்டில் காங்கிரஸ் வேட்பாளராக சதிகுமாரி போட்டியிட்டார்.
அவர் மார்க்சிஸ்ட் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். கடந்த 12 ஆம் தேதி இவர் கட்சி கூட்டத்துக்கு பின்னர் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டினருகே ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் வைத்து பைக்கில் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு கும்பல் தன்னை தாக்கி கூந்தலை அறுத்ததாக சதிகுமாரி பாறசாலை போலீசில் புகார் கூறினார். இது தொடர்பாக பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் போலீசார், ‘‘சதிகுமாரி கூறிய புகார் தொடர்பாக இதுவரை தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காததால் அவரது புகாரில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்ற வேண்டும்'' என திருவனந்தபுரம் மாவட்ட எஸ்.பி. முகம்மது ஷெபீனிடம் தெரிவித்தனர். இதையடுத்து கூந்தல் அறுப்பு வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்த எஸ்.பி. முகம்மது ஷெபீன் உத்தரவிட்டுள்ளதையடுத்து அவர்கள் விசாரணையத் துவங்கியுள்ளனர்.