டிஷ்யூம்... சீக்கியர்களின் மத உணர்வை புண்படுத்தியதாக நடிகை ஜாக்குலின் மீது வழக்கு
மும்பை: டிஷ்யூம் படத்தில் சீக்கியர்களின் மத உணர்வைப் புண் படுத்தியதாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது பஞ்சாபில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாஜித் தயாரிப்பில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாயகியாக நடித்துள்ள இந்திப் படம் டிஷ்யூம். ரோஹித் தவான் இப்படத்தை இயக்கியுள்ளார்.
விரைவில் ரிலீசாக உள்ள இப்படத்தில் சீக்கியர்களின் ஐந்து மரபுகளில் ஒன்றான, 'கிர்பான்' கத்தியை கிண்டல் செய்யும் விதமாக, ஜாக்குலின் நடித்த பாடல் காட்சி இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்ப்பு...
இதற்கு, சீக்கிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 15ம் தேதி இது தொடர்பாக சீக்கிய அமைப்பினர் சென்சார் போர்டுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

வழக்குப்பதிவு...
அதன் தொடர்ச்சியாக, சீக்கியர்களின் மனதை புண்படுத்தியதாக கூறி, மனிதநேயத்திற்கான வழக்கறிஞர்கள் என்ற அமைப்பினர் ஜாக்குலின், சாஜித் உள்ளிட்டோர் மீது பஞ்சாப் மாநிலம் சண்டிகர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மறுப்பு...
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை டிஷ்யூம் பட இயக்குநர் ரோஹித் மறுத்துள்ளார். தனது படத்தில் பயன்படுத்தப்பட்டது கிர்பான் கத்தியல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

பாடலை நீக்க வேண்டும்...
ஆனால், இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத சீக்கிய அமைப்பினர், சம்பந்தப்பட்ட பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் அல்லது மீண்டும் படப்பிடிப்பு நடத்தி அப்பாடலின் காட்சிகளை மாற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கைப் பெண்...
தற்போது வழக்கில் சிக்கியுள்ள நடிகை ஜாக்குலின் இலங்கையைச் சேர்ந்தவர். இவர் நடிகர் சல்மானின் காதலி என கிசுகிசுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications