100 கிராம் தயிர் ரூ.972க்கு கொள்முதல்? இல்லவே, இல்லை என்கிறது ரயில்வே துறை
100 கிராம் தயிர் ரூ.972க்கும்,ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.1,241க்கும் இந்திய ரயில்வே நிர்வாகம் வாங்குகிறது என்ற தகவல் இந்தியாவையே அதிர வைத்தது.இதை ரயில்வே துறை மறுத்துள்ளது.
டெல்லி:இந்திய ரயில்வே துறையில் 100 கிராம் தயிர் ரூ.972க்கும்,சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் விலை ரூ.1241க்கும்,வாங்கப்படுகிறது என்ற தகவல் ஆர்டிஐ மூலம் வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்திய ரயில்வே துறையில் நூறு கிராம் தயிர் ரூ 972 க்கு வாங்குவதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டிருக்கிறது. இது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜக தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்ததில் இருந்து, பிரதமர் மோடி எங்கள் தலைமையிலான அரசுக்கு வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என தெரிவித்து வந்தார். அதனைப் பிரதிபலிக்கும் வகையில்,பல்வேறு நிகழ்வுகளை பாஜக அமைச்சர்கள் அவ்வப்பொழுது மீடியா வெளிச்சத்தில் செய்தும் வந்தனர்.
ஆனால் பாஜக அரசின் உள்நோக்கம் இந்தியாவில் மிச்சம் இருக்கும் பொதுத்துறையையும் தனியார் ஒப்படைத்துவிட்டு பொதுமக்களை விலையேற்ற நெருக்கடியில் தள்ளுவதே என்பது இப்போது வெட்டவெளிச்சமாய் தெரிகிறது.
தனியார் மயமாக்க துடிக்கும் மத்திய அரசு
அதில் இப்போது சிக்கியிருப்பது ரயில்வே துறை. ரயில்வே துறை வளர்ச்சி என்கிற பெயரில் அதைத் தனியார் கைகளில் ஒப்படைக்க துடிக்கிறது மத்திய அரசு என்கிறர்கள் சமூக ஆர்வலர்கள். இந்நிலையில் மத்திய இரயில்வேயில் வாங்கும் 100 கிராம் தயிர் விலை ரூ.972 மற்றும் சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் விலை ரூ.1241 என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் பதில் அளித்து அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.
பின்னணியில் பாஜக அமைச்சர்?
தொழில் நுட்பம் வலுவாக வளர்ந்துவிட்ட காலத்தில் மிக எளிதாகவும்,நுட்பமாகவும் ஊழல் நடத்திவதில் பாஜகவினர் தேர்ந்துவிட்டனர் என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.நாடு முழுவதும் விரிந்து பரந்துள்ள ரயில்வே துறையில் ஊழல் நிறைந்துள்ளது என்பதற்கு இதுவே சான்றாக இருக்கிறது.கண்டிப்பாக சம்மந்தப்பட்ட அமைச்சருக்கு தெரியாமல் நடந்திருக்காது என்று கூறப்பட்டது.
அச்சுப்பிழை என்கிறது ரயில்வே
தயிர்,எண்ணெய் ஊழல் நடந்துள்ளது ரயில்வே அமைச்சர் அலுவலகத்தை பரபரப்பாக்கியுள்ளது. உடனே இந்த விவகாரத்தை மூடி மறைக்க ஏற்பாடுகளை நிர்வாகம் முடிக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய ரயில்வே நிர்வாகம் அச்சுப்பிழை ஏதேனும் இருக்க வாய்ப்புள்ளது என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|
ரயில்வேயின் விளக்கம்
இந்நிலையில் இந்திய ரயில்வே அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில்,நீண்ட விளக்கம் அளித்துள்ளது. அதில், 108 தயிர் கப்புகள் கொண்ட ஒரு பெட்டியின் விலை ரூ.970 தான் என்றும்,ஒரு கப்பில் 100 கிராம் எடை கொண்ட தயிர் இருக்கும் என்றும், அப்படியானால் 100 கிராம் தயிர் விலை ரூ.8.9 என்றும் கூறியுள்ளது.மேலும் 15 லிட்டர் கொண்ட சமையல் எண்ணெய்யின் விலை ரூ.1241 என்றும்,அதில் அரை லிட்டர் சமையல் எண்ணெய் விலை ரூ.82 தான் என்றும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளது.