கோரத் தாண்டவம் ஆடிய பைபர்ஜாய்.. 2 பேர் பலி.. 22 பேர் காயம்.. இருளில் மூழ்கிய 940 கிராமங்கள்!
அகமதாபாத்: பைபர்ஜாய் புயல் நள்ளிரவில் கரையை நெருங்க நெருங்க புயல் காற்று பயங்கரமாக வீசி பேய் மழை பெய்தது. பைபர்ஜாய் புயல் காரணமாக 2 பேர் பலியானதாகவும், 22 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே நேற்று மாலை கரையை கடக்க துவங்கியது. அதன் மையப்பகுதி நள்ளிரவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதன் காரணமாக சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடலோர பகுதியில் பலத்த காற்றுடன் புயல் மழை பெய்தது. மணிக்கு 125 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையின் 12 குழுக்களும், மாநில சாலை மற்றும் கட்டட துறையின் 115 குழுக்களும், மின் துறையின் 397 குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், பைபர்ஜோய் புயல் தாக்கியதில் பவ்நகர் மாவட்டத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 22 பேர் காயமடைந்துள்ளனர். 23 விலங்குகள் உயிரிழந்தன. 500க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. பலத்த காற்று மற்றும் கனமழையால் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் சுமார் 900 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளதாக குஜராத் மாநில நிவாரண ஆணையர் அலோக் சிங் தெரிவித்தார்.
சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் இரவு முதலே ஈடுபட்டுள்ளனர். மேலும், புயல் பாதிப்பு நிலவரம் குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேலிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
முப்படைகள் மற்றும் கடலோர காவல்படை என பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளும் முழுவீச்சில் மீட்பு பணியில் களமிறக்கப்பட்டுள்ளன. அதி தீவிர புயலான பைபர்ஜாய் குஜராத்தில் ஏற்படுத்திய சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருகிறது. இதன் முழுமையான விரைவில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications