குஜராத்தின் 8 மாவட்டங்களை நாசப்படுத்திய பைபர்ஜாய்.. புயலால் உயிரிழப்பே இல்லை.. ஆனால் அந்த 2 பேர்?
அகமதாபாத்: அரபிக்கடலில் உருவான பைபர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதி தீவிர புயலாக கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ வேகம் வரை காற்று வீசியதால், 5,120 மின்கம்பங்கள் சாய்ந்தன. புயலுக்கு முன்னதாக 2 பேர் உயிரிழந்திருந்தாலும், புயலின்போது எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
பைபர்ஜாய் புயலால் 5,120 மின் கம்பங்கள் சாய்ந்ததால், 4,600 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 3,580 கிராமங்களில் நேற்று மின் இணைப்பு சீரமைக்கப்பட்டது. 3 மாநில நெடுஞ்சாலைகளில் 600 மரங்கள் வேரோடு சாய்ந்ததால், நேற்று போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
குஜராத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினர், மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். பைபர்ஜாய் புயலை முன்னிட்டு குஜராத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பு படையினர், மீட்பு படையினர், போலீஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள், புயல் பாதிக்க வாய்ப்புள்ள பகுதிகளில் வசித்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பைபர்ஜாய் புயலால் 9 வீடுகள், 20 குடிசை வீடுகள் புயல் காற்றில் முற்றிலும் சேதம் அடைந்தன. 2 வீடுகள், 474 குடிசை வீடுகள் ஓரளவு சேதம் அடைந்தன. புயல் கரையை கடந்த போது கட்ச் பகுதி முழுவதும் கனமழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை 2.30 மணி வரை நீடித்தது. ஆனால், பைபர்ஜாய் புயல் கரை கடந்தபோது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
பாவ்நகர் மாவட்டத்தில், புயல் கரையை கடப்பதற்கு முன்பாக, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தந்தையும், மகனும், சிறிய ஆற்றின் வழியாக ஆடுகளுடன் கடந்து சென்றனர். அப்போது வெள்ளத்தில் சிக்கிய ஆடுகளை காப்பாற்ற முயன்ற இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அதனால் இவர்களின் உயிரிழப்பு புயல் பாதிப்பு உயிரிழப்பாக கணக்கிடப்படவில்லை.
புயல் பாதிப்பு வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து முன்கூட்டியே சுமார் 1 லட்சம் பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்தது என மாநில நிவாரண குழு ஆணையர் ஆலோக் குமார் பாண்டே தெரிவித்தார்.
கட்ச், தேவபூமி துவாரகா, ஜாம்நகர், மோர்பி, ஜூனாகத், கிர் சோம்நாத், ராஜ்கோட் மற்றும் போர்பந்தர் ஆகிய 8 மாவட்டங்களில் 1,127 குழுக்கள் புயலுக்குப் பிறகு மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள 714 துணை மின் நிலையங்களின் செயல்பாடுகளை பராமரிக்க 51 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஷக்திசிங் கோஹில் மற்றும் பிற தலைவர்கள் குஜராத் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் புயலை தேசிய பேரிடராக அறிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர். கோஹில் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்ச்சின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிலைமையை மதிப்பீடு செய்தனர்.












Click it and Unblock the Notifications