மஹா புயல் திடீர் யூ டர்ன்.. குஜராத்தில் கரையை கடக்குமாம்.. 100 முதல் 120 கிமீ வரை காற்றும் வீசும்!
அதி தீவிர புயலாக வலுப்பெறுகிறது மஹா புயல் என எச்சரிக்கப்பட்டுள்ளது
Recommended Video
டெல்லி: யூ-டர்ன் அடித்து திசை மாறி.. குஜராத்தை நோக்கி நகரப் போகிறது மஹா புயல். அது அதி தீவிர புயலாக உருவெடுக்கவுள்ளதாம். இதனால் 100 முதல் 120 கி.மீ வரை வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழைக்காலம் தற்போது ஆக்டிவாக உள்ளது. போன வாரம் குமரிக்கடலில் 2 புயல்கள் உருவாகின. அவற்றுக்கு கியார், மஹா என பெயரிட்டனர்.
இதில் கியார் புயல், கனமழை தவிர, எந்தவித பாதிப்பையும் நமக்கு தந்துவிடவில்லை. பிறகு உருவான மஹா புயல், வடக்கு வடமேற்கில் நகர்ந்து ஓமன் கடற்பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதன்பிறகு மெல்ல நகர்ந்து டையூவில் இருந்து தென்மேற்கே 580 கி.மீ தொலைவிலும், வெரவலில் இருந்து தென்மேற்கே 550 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

அதி தீவிர புயல்
ஆனால் இப்போது திடீரென திசை மாறி குஜராத் கடற்கரையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. மணிக்கு 9 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஓமன் நோக்கி சென்று கொண்டிருந்த புயல், குஜராத் கடற்கரை நோக்கி திரும்பும்போது அதி தீவிர புயலாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம்
நாளை மறுநாள் இரவு அதாவது 6-ம் தேதி இரவு தீவிர புயலாக வலு குறைந்து, டையூ, துவாரகா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்படி மகா புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கி.மீ வரை வேகமாக காற்று வீசும் என்ற எச்சரிக்கையும் எழுந்துள்ளது. எனவே, சவுராஷ்டிரா பகுதி துறைமுகங்களில் 2-ம் எண் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை
மேலும் மீனவர்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மகா புயல் பாதிப்பு காரணமாக 6, 7 ஆகிய தேதிகளில் கொங்கன், வட மத்திய மகாராஷ்டிராவில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கங்கள்
மஹா புயல் பெருமளவு நமக்கு கை கொடுக்கவில்லை என்றாலும், வங்காள விரிகுடா கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 6க்குள் அந்தமான் அருகே அது புயலாக மாற வாய்ப்பு உள்ளது. அது புயலாக மாறிய பிறகு, அதன் தாக்கங்கள் பற்றிய விவரங்கள் தெரிய வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மழைபொழிவு
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் நேற்றுகூட கனத்த மழை பல மாவட்டங்களில் பெய்தது. குறிப்பாக கோவை, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் பலத்த மழை பொழிவு தென்பட்டது.












Click it and Unblock the Notifications