டவ்-தே புயல்: குஜராத்தில் 13 பேர் பலி; 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு- பிரதமர் மோடி இன்று ஆய்வு!
அகமதாபாத்: அரபிக் கடலில் உருவாகி குஜராத்தில் கரையை கடந்த டவ்-தே புயலால் 13 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். சுமார் 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிடுகிறார்.

அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே உருவானது டவ்-தே புயல். இது அதிதீவிர புயலாக வலுவடைந்து திங்கள்கிழமையன்று இரவு முதல் அதிகாலை வரை குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் கரையை கடந்தது.
தற்போது வலுவிழந்த நிலையில் ராஜஸ்தானுக்குள் இந்த புயல் நகர்ந்துள்ளது. குஜராத்தில் கரையை கடந்த டவ்-தே புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை குஜராத்தில் டவ்-தே புயலால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபாணி தெரிவித்துள்ளார்.
மேலும் 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது; 69,000 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன; 674 சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் வேளாண்பயிர்களும் சேதமடைந்துள்ளன என்றார் முதல்வர் விஜய் ரூபாணி.
இதனிடையே குஜராத்தில் புயல் சேத பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார். டெல்லியில் இருந்து இன்று காலை குஜராத்தின் பாவ்நகர் செல்லும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் புயல் பாதிப்பை பார்வையிடுகிறார். டையூ, மஹூவா உள்ளிட்ட பகுதிகளையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.












Click it and Unblock the Notifications