ஒடிஷா கடலோரப் பகுதியை மிரட்டிக் கொண்டு வருகிறது இன்னொரு "பாய்லின்" புயலால் பீதி!
புவனேஸ்வரம்: ஒடிஷா கடலோரப் பகுதியை மிரட்டும் வகையில் இன்னொரு "பாய்லின்" டைப் புயல் உருவாகிக் கொண்டிருப்பதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதம்.. தாய்லாந்து கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது.. மெல்ல மெல்ல அது நகர்ந்து அந்தமான் கடற்பரப்பை அடைந்து.
அது மேலும் வலுவடைந்து "பாய்லின்" புயலாக உருவெடுத்து அக்டோபர் 10-ந் தேதி முதல் ஒடிஷாவை தாக்கத் தொடங்கியது. இந்த பாய்லின் புயலால் ஒடிஷாவின் கடலோரப் பகுதிகள் பெரும் சேதத்தை எதிர்கொண்டன.
இதேபோல் தற்போதும் தாய்லாந்து கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுக்க இருக்கிறது.
தற்போதைய நிலையில் இப்புயல் அந்தமான் தீவுகளை நோக்கி நகர்ந்து அது ஒடிஷா கரையைத் தாக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மற்றொரு பாய்லின் புயல் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் ஒடிஷாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.