அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை.. கடல் சீற்றம் இருக்கும் என வானிலை மையம் அலர்ட்!
டெல்லி: அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருப்பதைத் தொடர்ந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று (நவம்பர் 4) மேலும் வலுவடையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது, மியான்மர் வங்கதேசம் கடலோரப் பகுதிகளை நோக்கி வடக்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளையொட்டிய கடல் பகுதிகள் பயங்கர சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், நவம்பர் 2 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் கிழக்கு, மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடற்கரையில் ஒரு குறைந்த தாழ்வழுத்த பகுதி உருவாக தொடங்கியது.
இந்தச் சூறாவளி சுழற்சி, சராசரியாக கடல் மட்டத்தில் இருந்து 5.8 கிமீ வரை நீண்டு காணப்படுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அதன் பின் வட மேற்கில் மியான்மர்- வங்கதேச கடற்கரையில் நகரத் தொடங்கும்.
அப்போது வடக்கு அந்தமான் கடலில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் காற்றும் வீசும். நவம்பர் 4 முதல் இந்த புயல் மேலும் தீவிரம் அடையும். அதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. கடல் தொடர்ந்து சீற்றமாகவே இருக்கும்.
எனவே வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதற்கு அப்பால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம். படகு உரிமையாளர்கள், தீவுகளில் வசிக்கும் மக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிலைமை சீராகும் வரை கடலில் பொழுது போக்கு நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்." என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வங்கக் கடலில் உருவான மொந்தா புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த அக். 27 ஆம் தேதி உருவான புயல் மசூலிபட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே அக்டோபர் 29 ஆம் தேதி அதிகாலை கரையை கடந்தது குறிப்பிடத்தக்கது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால் ஆந்திராவின் கிருஷ்ணா, மசூலிபட்டினம் உள்ளிட்ட கடலோர் பகுதிகளில் இடி, மின்னலுடன் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. அல்லூரி மாவட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications