கஜா, வர்தாவை விட மிக வலிமையான ஃபனி... 200 கி.மீ. வேகத்தில் நொறுக்கியது
Recommended Video
டெல்லி: கஜா, வர்தா புயல்களை விட மிக வலிமையான புயலாக ஃபனி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கரையை கடந்ததில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஃபனி புயலின் கண்பகுதி ஒடிசாவின் பூரி அருகே கரையை கடந்த போது, மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. காலை 8 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கிய புயலின் தாக்கம் காலை 11 மணி வரை தொடரும் என இந்திய வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஃபனி புயல் பூரி நகருக்கு தென்மேற்கே 25 கி.மீ. தொலைவில் இருந்து 45 கி.மீ வேகத்தில் நகர்ந்து 200 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இதனால், ஏராளமான பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பூரிக் கடற்கரையில் இருக்கும் மக்களை வெளியேற்றுவதில், தேசியப் பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்

வர்தா புயல் பாதிப்பு
2016 ஆண்டு டிசம்பர் மாதம் தென்கிழக்கு வங்க கடலில் உருவான புயலுக்கு வர்தா என பெயரிடப்பட்டது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பழவேற்காடு அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னை மாவட்டம் தான். ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

கஜா புயல் பாதிப்பு
கடந்தாண்டு நவம்பர் 16-ந் தேதியன்று 110 கி.மீ. வேகத்தில் கஜா புயல் கரையை கடந்தபோது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, கடலூர், கரூர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றினாலும், கன மழையினாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.

514 பாதுகாப்பு முகாம்கள்
கஜா புயல் மற்றும் கனமழையின் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 514 பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 674 பேர் தங்கவைக்கப்பட்டனர். கஜா புயலில் சிக்கி, டெல்டா மாவட்டங்களில் தென்னை, மா உள்ளிட்ட விவசாய பயிர்கள் நாசமாகின.

11 லட்சம் பேர் வெளியேற்றம்
ஃபனி புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து 11 லட்சம் பேர் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5,000 சமையல் கூடங்களில் உணவு தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஃபனி புயல் பாதிப்புகளுக்கு உதவிகள் பெற 1938 என்ற உள்துறை அமைச்சகத்தின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தினர் நிவாரணப் பொருட்களைப் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications