ஆம்புலன்ஸின் எரிவாய் சிலிண்டர் வெடித்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு- தானேயில் பரிதாபம்!
தானே: மும்பை ஆம்புலன்ஸ் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பச்சிளம் குழந்தை ஒன்று பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் ஆம்புலன்ஸ் ஒன்று புதிதாய் பிறந்த குழந்தை ஒன்றையும், அதன் தாயையும் சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்தது. அதில் ஓட்டுநர் உட்பட மேலும் இருவர் இருந்தனர்.
இரவு நேரத்தில் விரைந்த அந்த ஆம்புலன்ஸ், திடீரென்று எரிவாயு சிலிண்டர் வெடித்த காரணத்தினால் தீப்பிடித்து எரிந்தது. இதில் குழந்தையின் தாயும், மற்ற இருவரும் வெளியில் வீசப்பட்டு படுகாயத்துடன் உயிர் பிழைத்தனர். அக்குழந்தை மட்டும் உள்ளே மாட்டிக் கொண்டது.
உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. எனினும், அக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. எனினும், அவர்கள் குறித்த விவரமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.