குல்பர்க் படுகொலை- மோடி விடுவிப்பை எதிர்ப்பு ஜாகியா வழக்கு: டிச 26-க்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!
அகமதாபாத்: குஜராத் குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் முதல்வர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஜாகியா தொடர்ந்த வழக்கில் வரும் 26-ந் தேதி அகமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
கடந்த 2002ம் ஆண்டு அயோத்தி சென்று திரும்பிய கர சேவகர்கள் குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் தீ வைத்து கொல்லப்பட்டனர்; இதையடுத்து, குஜராத்தில் நிகழ்ந்த மத கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
அதேபோல் அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் முஸ்லிம்களுடன் கூடியிருந்த, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஏசான் ஜாப்ரி மற்றும் 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். முதல்வர் நரேந்திர மோடி தூண்டுதலின் பேரில் தான் இப்படுகொலை நடந்தது என ஏசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடந்து உச்சநீதிமன்றம் சி.பி.ஐ முன்னாள் இயக்குனர், ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. ஆனால் அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவோ, குல்பர்க் படுகொலையில் மோடிக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 59 பேருக்கும் தொடர்பில்லை' என தெரிவித்தது. இதனால் வழக்கிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டார்.
ஆனால் இதை ஜாகியா ஏற்றுக் கொள்ளவில்லை; விசாரணை சரிவர நடக்கவில்லை எனக்கூறி மீண்டும் விசாரிக்க வேண்டு கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். முதலில் இந்த வழக்கை விசாரித்த, அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ஜாகியா, அகமதாபாத் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பி.ஜே.கனத்ரா விசாரணை நடத்தி வந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கடந்த அக்டோபர் 28-ந் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறி இருந்தார்.
பின்னர் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று ஒத்திவைத்திருந்தார். ஆனால் இன்றைய விசாரணையின் போது வரும் 26-ந் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் அவர் பிரசாரம் செய்து வரும் நிலையில் இந்த வழக்கில் வெளிவரப்போகும் உத்தரவு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications