டி.கே.ரவி வழக்கை விசாரிக்க மறுத்த சிபிஐ.. தவறை தாமதமாக உணர்ந்த கர்நாடக அரசு!
பெங்களூரு: 3 மாத காலக்கெடுவிற்குள் டி.கே.ரவி மரணம் குறித்து விசாரணை நடத்த காலக்கெடு நிர்ணயித்த கர்நாடக அரசின் கோரிக்கையை சிபிஐ ஏற்க மறுத்த நிலையில், காலக்கெடு நிர்ணயிக்காத புதிய ஒரு வேண்டுகோளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.
மார்ச் 16ம்தேதி தனது அப்பார்ட்மென்ட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், பெங்களூரில் வணிக வரி கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்த டி.கே.ரவி. மாஃபியாக்களுக்கு எதிராக ரவி எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததால், மக்கள் போராட்டம் வெடித்தது.

பணிந்த மாநில அரசு சிபிஐ விசாரணைக்கு, வழக்கை ஒப்படைப்பதாக அறிவித்தது. இந்நிலையி்ல், மாநில அரசின் கோரிக்கையையில் குறைபாடு உள்ளதாக சிபிஐ இன்று கர்நாடக அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதில், கர்நாடக அரசு, இந்த வழக்கை, 3 மாதங்களில் நடத்தி முடிக்க சிபிஐக்கு கெடு விதித்து அறிவிப்பு வெளியிட்டது. சட்டப்படி, எந்த ஒரு அரசும் இதுபோல சிபிஐக்கு கெடு விதிக்க முடியாது.
எனவே புதிதாக கோரிக்கை கடிதம் அனுப்பினால் மட்டுமே வழக்கை கையில் எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உடனடியாக கர்நாடக அரசு புதிதாக, ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த கோரிக்கையில் கெடு எதுவும் விதிக்கப்படவில்லை.
இப்போது, சிபிஐக்கு முழு அதிகாரம் கிடைத்துள்ளது. அதேநேரம், இந்த சிறிய விஷயமும் தெரியாமலா, கர்நாடக அரசு சிபிஐக்கு வழக்கை பரிந்துரைத்தது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு வேண்டுமென்றே டெக்னிக்கல் தவறை செய்து, வழக்கை சிபிஐ எடுத்து விசாரிப்பதற்கு காலதாமதத்தை ஏற்படுத்த கர்நாடக அரசில் யாரேனும் முயன்றிருக்கலாமோ என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications