அப்பாவுக்கு மருந்து வாங்கப் போன 13 வயது சிறுமி பலாத்காரம் - உபியில் தொடரும் அதிர்ச்சிகள்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 13 வயதான சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்டாய் மாவட்டம் சுர்சா கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி உடல் நலம் இல்லாத தனது தந்தைக்கு மருந்து வாங்கச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பல இடங்களில் தேடினார்கள்.
இந்த நிலையில் மறுநாள் காலையில் கிராமத்திற்கு வெளியே உள்ள வயலில் சிறுமி பிணமாக கிடந்தாள். அவளது உடலில் காயங்கள் இருந்தன. போலீஸ் விசாரணையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமி மருந்து வாங்க சென்ற போது பின் தொடர்ந்து சென்ற கும்பல் அவளை கடத்திச் சென்று வயல்வெளியில் வைத்து பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கிறார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "ஒரு பெண்ணை நான்கு பேரால் பலாத்காரம் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். பெண்களின் தவறான தகவலால் அப்பாவிகள் தண்டிக்கப்படுவதாகவும், உத்தரப்பிரதேசத்தில் பலாத்கார குற்றங்கள் குறைவு" என்றும் கூறியிருந்தார்.
அவர் சொன்ன மறுநாளே உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண்ணை 7 பேர் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நடந்தது. தற்போது மேலும் ஒரு சிறுமி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இதற்கிடையே முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவின் எம்.பி தொகுதியான கன்னாஜில் 15 வயது சிறுமியை பெற்றோர் கண் எதிரில் கொள்ளை கும்பல் பலாத்காரம் செய்தது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு கெட்டு விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.