தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்து தாக்கி, பாலியல் கொடுமை.. திருமண ஊர்வலத்தை பார்த்ததால் வெறியாட்டம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த திருமண ஊர்வலத்தைப் பார்த்ததற்காக மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர், அந்த தலித் இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி, அவர் மீது சிறுநீர் கழித்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் விண்வெளி, ஆராய்ச்சி, கல்வி என பல்துறைகளில் சிறந்து விளங்கினாலும் இன்றும் ஜாதி, மதம் ரீதியான தாக்குதல்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இப்போதெல்லாம் யார் ஜாதி பார்க்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு மத்தியில், ஒவ்வொரு நாளும் ஜாதி ரீதியான தாக்குதல் சம்பவங்கள் நம் கண் முன்னே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞரோ, இளம்பெண்ணோ மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை காதலிப்பது, நட்பாக பழகுவது, சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துக்கு வந்தால் அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவது, சமீபத்தில் கூட ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காக கை வெட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியது.
இதுபோன்ற சம்பவங்களுக்கு இடையே திருமண ஊர்வலத்தைப் பார்த்ததற்காக ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது இருவர் சிறுநீர் கழித்து தாக்கி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், சிகர் மாவட்டம், ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான இளைஞர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த இளைஞர் அவர் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதனைப் பார்த்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அவரை தனியாக ஆள் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று, ஆடைகளை கழட்டி அவர் மீது இருவரும் சிறுநீர் கழித்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தை தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துகொண்டு, இதைப் பற்றி வெளியே சொன்னால் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் ஏப்ரல் 16 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: வீட்டின் அருகே திருமண வரவேற்பு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அதனை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் பார்த்துள்ளார். இதைப் பார்த்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அவரைத் தனியாக அழைத்துச் சென்று அவரை உட்கார வைத்து அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர்.
இளைஞரின் ஆடைகளை அவிழ்த்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஜாதி பெயரை சொல்லி கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இளைஞரின் பிறப்புறுப்பிலும் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications