ஜார்க்கண்ட் முதல்வராக ரகுபர்தாஸ் நாளை பதவி ஏற்கிறார்! பிரதமர் மோடி பங்கேற்பு!!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜகவின் ரகுபர்தாஸ் நாளை பதவி ஏற்றுக் கொள்கிறார். இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 42 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. பாஜக 37 இடங்களிலும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு 5 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதைத் தொடர்ந்து ராஞ்சியில் நேற்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. மேலிட பார்வையாளர், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற பா.ஜ.க. தலைவராக கட்சியின் தேசிய துணைத் தலைவரும், ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதி உறுப்பினருமான ரகுபர்தாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை நீல்காந்த்சிங் முண்டா முன்மொழிய, கட்சி தலைவர்கள் சரயுராய், சி.பி.சிங் ஆகியோர் வழிமொழிந்தனர்.
இதனைத் தொடர்ந்து ரகுபர்தாஸ் நேற்று ஆளுநர் சையது அகமதுவை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி கடிதம் வழங்கினார். அதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். ரகுபர்தாஸ் நாளை முதல்வர் பதவி ஏற்றுக் கொள்கிறார்.
பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். முதல் கட்டமாக 10 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலாவது பழங்குடியினர் அல்லாத முதல்வர் ரகுபர்தாஸ் தான். ஜார்கண்ட் மாநிலம் உருவான 14 ஆண்டுகளில் 3 சட்டசபை பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ளது. ரகுபர்தாஸ் தலைமையில் அமைய இருக்கும் இந்த ஆட்சி 10-வது ஆட்சியாகும்.












Click it and Unblock the Notifications