மும்பை தாக்குதல் வழக்கில் திருப்பம்: அப்ரூவரானார் ஹெட்லி - மன்னிப்பு அளித்து சாட்சியமாக்கியது கோர்ட்
மும்பை: உலகை உலுக்கிய மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அமெரிக்கா சிறையில் உள்ள பயங்கரவாதி டேவிட் ஹெட்லி அதிரடியாக அப்ரூவராகியுள்ளார். இதையடுத்து அவர் கோரியபடி மும்பை தடா நீதிமன்றம் ஹெட்லிக்கு மன்னிப்பு அளித்து சாட்சியமாக சேர்த்துள்ளது.
2008ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதியன்று மும்பையில் ஊடுருவிய பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் பல இடங்களை துப்பாக்கி முனையில் கைப்பற்றி கொடூர தாக்குதலை நடத்தினர். உலகை உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் சிக்கினான். மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அஜ்மல் கசாப்பும் அண்மையில் தூக்கிலிடப்பட்டான். இந்த வழக்கு மும்பை தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தாக்குதலில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக அமெரிக்காவில் 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி மற்றும் அபு ஜிந்தால் ஆகியோருக்கும் தொடர்பிருப்பது உறுதியானதால் இருவரும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

குற்றப்பத்திரிகை
இவ்வழக்கில் 2011ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஹெட்லி, அவரது நண்பர் ரானா, லஷ்கர் இ தொய்பாவின் நிறுவனர் ஹபீஸ் சயீத் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கும் வகையிலான குற்றச்சாட்டுகள் அதில் சுமத்தப்பட்டிருந்தன.

ஹேட்லியை ஆஜர்படுத்த உத்தரவு
அண்மையில் விவழக்கின் விசாரணையின் போது, மும்பை தாக்குதலில் டேவி ஹெட்லி, அபு ஜிந்தால் ஆகியோர் மூளையாக செயல்பட்டிருக்கின்றனர்; ஆகையால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் டிசம்பர் 10-ந் தேதி இருவரையும் ஆஜர்படுத்த வேண்டும் என்று மும்பை தடா நீதிமன்ற நீதிபதி சனாப் உத்தரவிட்டிருந்தார்.

மன்னிப்பு தாருங்கள்...
இதனடிப்படையில் மும்பை தடா நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையில் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் டேவிட் ஹெட்லி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஹெட்லி ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருந்த அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறப்படிருந்ததாவது:
என் மீதான குற்றச்சாட்டுகளின் ஆவணங்களைப் பார்த்தேன். அமெரிக்காவில் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இதுவும் முன்வைக்கப்பட்டுள்ளன. என் மீதான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரத்தில் எனக்கு மன்னிப்பு அளித்தால் இவ்வழக்கில் சாட்சியமாக, நீதிமன்றத்தின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன்.
இவ்வாறு ஹெட்லி தெரிவித்தார்.

30 நிமிடம் ஒத்திவைப்பு
இதனைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் உஜ்வால், ஹெட்லியின் கோரிக்கை குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க அவகாசம் கோரினார். இதற்கு நீதிபதி சனாப் அனுமதி தந்து நீதிமன்றத்தை 30 நிமிடம் ஒத்திவைத்தார்.

மன்னிப்பு அளித்தார் நீதிபதி
இதன் பின்னர் நீதிமன்றம் கூடிய போது நீதிபதி சனாப் பிறப்பித்த உத்தரவு:
ஹெட்லியின் பொது மன்னிப்புக் கோரிக்கையை நிராகரித்தால் மும்பை தாக்குதல் வழக்கில் மிகவும் முக்கியமான ஒரு சாட்சியின் வாக்குமூலத்தை பெற இயலாமல் போய்விடும். ஆகையால் ஹெட்லிக்கு இந்திய குற்றவியல் சட்டத்தின் 307வது பிரிவின் கீழ் பொது மன்னிப்பு அளிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மும்பை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் ஹெட்லி அரசுத் தரப்பு சாட்சியாகி உள்ளார். இதனால் மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் நடத்திய பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்கள், அதன் பின்னணியில் இருந்த சதித் திட்டங்கள், இவற்றில் தொடர்புடையவர்கள் பற்றிய பல விவரங்களையும் டேவிட் ஹெட்லி அளிக்க வேண்டும். இந்த தாக்குதல்களில் தன்னுடைய பங்கு என்ன என்பதையும் ஹெட்லி தெரிவிக்க வேண்டும் மீண்டும் பிப்ரவரி 8-ந் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஹெட்லியிடம் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு நீதிபதி சனாப் உத்தரவிட்டிருந்தார்.
பயங்கரவாதி ஹெட்லி சாட்சியமாகி வாக்குமூலம் அளிக்கும் போது பாகிஸ்தானின் பல்வேறு சதித்திட்டங்கள் அம்பலமாகும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications