கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நெருக்கடியில் தயாளு அம்மாள்.. மே 26ம் தேதி கைதா? கலக்கத்தில் திமுக!
சென்னை: கலைஞர் டிவிக்கு பணம் கைமாறிய வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் மே 26ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆஜரானால் அங்கேயே அவர் கைது செய்யப்படலாம் என்பதால் திமுக கலங்கிப் போயுள்ளது.

தயாளு அம்மாளை சாட்சியாக மட்டும் சேர்த்த சிபிஐ:
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு முறைகேடாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது; இதற்கு ஆதாயமாக கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி பணம் கைமாறியது என்பது சிபிஐ புகார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் கலைஞர் டிவியின் பங்குதாரர்களில் ஒருவரான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

தயாளு அம்மாளை குற்றவாளியாக சேர்த்த அமலாக்கப் பிரிவு:
அதே நேரத்தில் கலைஞர் டிவிக்கு பணம் கைமாறிய விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate), அன்னிய செலாவணி மோசடி பிரிவின் கீழ் தனியே ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உட்பட 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மே 26ல் ஆஜராக உத்தரவு:
இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணைக்கு மே 26ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அனைவருக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது டெல்லி நீதிமன்றம்.

சிபிஐ வழக்கில் விலக்கு
முந்தைய சிபிஐ வழக்கில் தயாளு அம்மாள் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவரை சாட்சியமளிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் தயாளு அம்மாளுக்கு அல்சைமர் எனும் மறதி நோய் இருப்பதால் நேரில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. ஆனாலும் நீதிமன்றம் ஏற்க மறுத்து ஆஜராக உத்தரவிட்டது.

வீட்டில் வைத்து சாட்சியம்:
இருப்பினும் உச்ச நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் சென்னையில் அவரது வீட்டிலேயே சாட்சியம் பெறப்பட்டது.

அமலாக்கப்பிரிவு வழக்கில் சம்மன்:
தற்போது அமலாக்கப் பிரிவு வழக்கில் தயாளு அம்மாளுக்கு ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இப்போது அப்படி இல்லை
ஆனால் முந்தைய சிபிஐ வழக்கில் ஆஜராக விலக்கு கோரியதைப் போல தற்போதும் மருத்துவ சான்றிதழை சமர்பித்து விலக்கு கோர முடியாத நிலை தயாளு அம்மாளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஓட்டுப் போட்டாரே..
ஏனெனில் ஏப்ரல் 24ம் தேதி நடைபெற்ற தேர்தலில் தயாளு அம்மாள் வாக்குப் பதிவு செய்திருக்கிறார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரி அவர் மனுத்தாக்கல் செய்தால், வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களிக்க முடியும் என்ற நிலையில் உள்ள ஒருவரால் ஏன் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று கேள்வி எழுப்ப அமலாக்கப் பிரிவு தயாராக உள்ளது. இதனை புரிந்து கொண்ட திமுக தரப்பும் வேறு சட்டவழிகள் ஏதேனும் இருக்கிறதா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

மே 26ம் கைதா?
அப்படியே தயாளு அம்மாள் ஆஜராக வேண்டிய நிலை வந்தால் அன்றைய தினமே அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு குற்றம்சாட்டப்பட்ட 19 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டால் என்ன செய்வது என்றும் கலங்கிக் கொண்டிருக்கிறது திமுக தரப்பு.

செல்வி சாட்சியம்
அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 30 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் தயாளு அம்மாள் மகள் செல்வியும் ஒரு சாட்சியமாக சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications