பஞ்சாப் பேருந்தில் மீண்டும் ஒரு இளம்பெண் மானபங்கம்: டிரைவர், கண்டக்டர் கைது
கன்னா: பஞ்சாப் மாநிலம் மோகாவில் சில நாட்களுக்கு முன் ஓடும் பேருந்தில் 14 வயது சிறுமியை மானபங்கம் செய்ய முயன்ற நபர்கள் பேருந்தில் இருந்து வெளியே தள்ளி கொலை செய்தனர். அந்த வடு மறைவதற்குள் மற்றொரு சிறுமி மானபங்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை தடுக்க முயற்சிக்காத டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாபில் கன்னா என்ற இடத்தில் ஓடும் பேருந்தில் பெண்கள் அமரும் இருக்கையில் வந்து ஒரு வாலிபர் அமர்ந்தார். திடீரென்று அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். உடனே அந்த பெண் சத்தம் போட்டு டிரைவர் - கண்டக்டரை உதவிக்கு அழைத்தார்.

ஆனால் அவர்கள் பேருந்தை நிறுத்தவோ அல்லது உதவிக்கு வரவோ மறுத்து விட்டனர். இந்தநிலையில் மானபங்கத்தில் ஈடுபட்ட வாலிபர் பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார்.
இதனால் அந்தப் பெண் செல்போன் மூலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்தை நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்தப்பெண் ஓடும் பேருந்தில் தன்னை வாலிபர் மானபங்கம் செய்ததாகவும், டிரைவரும்,கண்டக்டரும் உதவிக்கு வராததுடன் பேருந்தை நிறுத்த மறுத்து விட்டதாகவும் புகார் கூறினார்.
இதையடுத்து சம்பவத்தை தடுக்க தவறிய பேருந்து டிரைவரும், கண்டக்டர் கைது செய்யப்பட்டனர். மானபங்கம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடந்த புதன்கிழமையன்று பஞ்சாப் முதல்வர் குடும்பத்தினருக்கு சொந்தமான பேருந்தில் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர். அனைத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது நீதி விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமி உடல் தகனம்
இதனிடையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, ஓடும் பேருந்தில் இருந்து தள்ளி விடப்பட்டு உயிரிழந்த சிறுமியின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது. சிறுமியின் சொந்தக் கிராமமான லாண்டேவில், அவரது தந்தை சுக்தேவ் சிங் இறுதிச் சடங்குகளை செய்தார்.
ரூ.30 லட்சம் இழப்பீடு
இந்நிலையில் சிறுமியின் உயிரிழப்புக்கு இழப்பீடாக ரூ. 24 லட்சமும், சிறுமியின் தாய்க்கு அரசு வேலையும் வழங்குவதாக மோகா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்தோடு தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் ரூ.6 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதனிடையே, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார். இந்த பாலியல் சம்பவம் பொறுத்துக் கொள்ள முடியாதது என்றும் மிகவும் மனவலியை ஏற்படுத்துகிறது என்றும் பாதல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications