குளிர்பானத்திற்குள் ‘பாம்புக்குட்டி’: குளிர்பானத்தை அருந்திய சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே இரண்டரை வயது சிறுமி அருந்திக் கொண்டிருந்த குளிர்பான பாட்டிலில் சிறிய பாம்புக் குட்டி ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப் பட்டது. குளிர்பானத்தை அருந்திய சிறிது நேரத்தில் சிறுமி மயக்கமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சாஜிவ் என்ற நபர் தனது இரண்டரை வயது மகளுக்காக ஒரு பிரபல குளிர்பான நிறுவனத்தின் அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட மாம்பழ ஜூஸ் வாங்கிக் கொடுத்துள்ளார்.
அந்தக் குளிர்பானத்தை அருந்திக் கொண்டிருந்த சிறுமி உள்ளே ஏதோ ஒரு பொருள் அடைப்பதை உணர்ந்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரும் அந்த குளிர்பான அட்டைப் பெட்டியை பிய்த்துப் பார்த்து அதிர்ந்து போயுள்ளார்.
காரணம் உள்ளே சிறிய பாம்புக்குட்டி ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அந்த அதிர்ச்சியில் இருந்து சாஜிவ் மீள்வதற்கு முன்னதாகவே, குளிர்பானத்தை அருந்திய அந்தச் சிறுமி மயங்கி கீழே விழுந்துள்ளாள்.
மகளை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த சாஜிவ், அதேகையோடு குளிர்பானத்தில் பாம்புக்குட்டி கிடந்தது பற்றி போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளார், போலீசார் நடத்திய விசாரணையில் குளிர்பானம் காலாவதியானது தெரிய வந்தது. குளிர்பானத்திற்குள் பாம்புக்குட்டி வந்தது எப்படி என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கேண்டீனில் விற்பனை செய்யப்பட்ட உணவு பாக்கெட்டில் செத்துப்போன விரியன் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications