ஈ, கொசு மூலமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்! சாதாரண காய்ச்சல்னு நினைக்காதீங்க! சண்டிபுரா வைரஸ் வார்னிங்
காந்திநகர்: கொரோனா தொற்று பீதி ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது வட மாநிலங்களில் 'சண்டிபுரா வைரஸ்' தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் தற்போது வரை 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
9 மாதங்கள் முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை மட்டும் குறிவைத்து தாக்கும் சண்டிபுரா வைரஸால் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் 8-10 மணி நேரத்தில் உயிரிழந்துவிடுவார்கள் என்பதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மருத்துவமனை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். இந்த வைரஸ் கொசு, மணல் ஈ மற்றும் உண்ணி உள்ளிட்டவற்றால் பரவுகிறது. சாதாரண காய்ச்சல் போல இருப்பதால் மக்களால் இதை அடையாளம் காண முடிவதில்லை.

பின்னணி: இந்த வைரஸ் தொற்று முதல் முறையாக கடந்த 1965ம் ஆண்டு மகாராஷ்டிராவின் நாக்பூரில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வாழ்ந்து வந்த பழங்குடி மக்களிடையே இந்த வைரஸ் பரவி அவர்களின் குழந்தைகளை கொன்றிருக்கிறது. அதன் பின்னர் குஜராத்திலும் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பின்னர் தேசிய வைராலஜி நிறுவனம் இந்த வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அதன் டேட்டாக்களை சேமித்து வைத்தது.
உயிரிழப்பு: இந்நிலையில், குஜராத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு குழந்தை கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. குழந்தையின் ரத்த மாதிரியை மருத்துவர்கள் புனே தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர். ஆய்வின் முடிவில், குழந்தை சண்டிபுரா வைரஸ் தொற்றால்தான் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதே அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 14 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கிறன.
குஜராத்தில், சபர்கந்தா, ஆரவலி, மெஹ்சானா, ராஜ்கோட், அகமதாபாத் நகரம், மோர்பி, பஞ்சமஹால் மற்றும் பிற பகுதிகளில் இந்த தொற்று பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது.
ஆய்வுகள் என்ன சொல்கின்றன: சண்டிபுரா வைரஸால் குழந்தைகள் பாதிக்கப்படும்போது காய்ச்சல் ஏற்படும். இது சாதாரண காய்ச்சல் என்று தவறாக நினைக்கப்படுகிறது. ஆனால் வைரஸ், கடுமையான மூளையழற்சியை ஏற்படுத்துகிறது. நோய்க்கிருமி ராப்டோவிரிடே குடும்பத்தின் வெசிகுலோவைரஸ் இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸின் பாதிப்புகள் குறித்து தெரிந்துக்கொள்வதற்கு முன்பே அது குழந்தையின் உயிரை எடுத்துவிடுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த பாதிப்புகள் குறித்து குஜராத்தின் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறுகையில், "தொற்று கண்டறியப்பட்ட மாவட்டங்களில் நாங்கள் தடுப்பு பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறோம். 51,725 பேரிடம் தொற்று குறித்து சோதனை செய்திருக்கிறோம். நகரங்கள் தவிர கிராமங்களில் இந்த தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்கள் குறித்த விவரங்களும் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த விவகாரத்தில் மக்கள் பீதியடைய வேண்டாம்" என கேட்டுக்கொண்டிருக்கிறார்.
சிகிச்சை: இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான தலைவலி, வலிப்பு, அடிக்கடி வாந்தி, குழப்பம், எரிச்சல் மற்றும் நினைவு தவறுதல் ஏற்படும். நோயின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்போது கோமா நிலைக்கு கூட தள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது. இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரம் நோய் அறிகுறி தென்பட்ட உடன் மருத்துவமனையில் குழந்தையை அட்மிட் செய்ய வேண்டும். நீர் சத்து குறைவதால் அவர்களுக்கு அதற்கான சிகிச்சை வழங்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இப்போது வரை 29 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் 26 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் ராஜஸ்தானையும், ஒருவர் மத்தியப் பிரதேசத்தையும் சேர்ந்தவராவார். 15 இறப்புகளில், குஜராத்தை சேர்ந்தவர்கள் 13 பேரும், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர் ஒருவர் எனவும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications