ஃபனி புயல் கோர தாண்டவம்... ஒடிசாவில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு
புவனேஷ்வர்: ஒடிசாவில் ஃபனி புயலில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசா மாநிலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து உதவிக்கரம் நீட்டப்பட்டு வருகிறது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஃபனி புயல், ஒடிசாவின் பூரி நகருக்கு தென்மேற்கே 25 கி.மீ. தொலைவில் இருந்து 45 கி.மீ வேகத்தில் நகர்ந்து 200 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இதனால், ஏராளமான பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒடிசாவில் ஒரு வழியாக புயல் கரையை கடந்தாலும், இரண்டு நாட்களாக கடும் மழை பெய்தது. இதனால், மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டது. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மின்சாரம் இல்லாமல் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தவித்து வருகின்றன.
புயலால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், 50 கிலோ அரிசி, ரூ.2,000 மற்றும் பாலிதீன் பாய்களை, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்க அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால், புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள், காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம், சீரான சில வழித்தடங்களில் வழக்கமான ரயில்களுடன், சிறப்பு ரயில்களும் இயங்கப்பட்டு வருகின்றன. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு 3-5 நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் சார்பில், ஒடிசாவிற்கு ரூ.10 கோடி நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications