"30 வயசில் செத்துடுவேன்.." 9 ஆண்டுக்கு முன்பே முடிவெடுத்த ஹோட்டல் அதிபர்.. உறைய வைக்கும் காரணம்
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் ஹோட்டல் அதிபர் ஒருவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுத்தபடியே 30 வயதில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பிரபல ஹோட்டல் அதிபர் ஒருவர் திடீரென தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். ஹோட்டல் தொழில் நன்றாகவே சென்று கொண்டிருந்த நிலையில், அவர் ஏன் இப்படிச் செய்து கொண்டார் என முதலில் யாருக்கும் புரியவில்லை. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷாக் சம்பவம்: மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்த அந்த நபர் 30 வயதான ஆதித்யா சர்மா என அடையாளம் காணப்பட்டார். அவர் நேற்று வியாழக்கிழமை இந்தூரில் உள்ள ஹிரா நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் துப்பாக்கியால் தன்னைத்தானே தலையில் சுட்டுக் கொண்டார். அப்போது ஆதித்யா ஏழு பக்க நீளமுள்ள தற்கொலை கடிதத்தையும் விட்டுச் சென்றுள்ளார். இந்தியில் அவர் எழுதியிருந்த கடிதத்தைப் படித்ததும் பலரும் ஷாக் ஆகிவிட்டனர்.
30 வயதான ஆதித்யா யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லையாம். பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் 30 வயது வரை மட்டுமே வாழ வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதன் காரணமாகவே யாரையும் திருமணம் செய்யாமல் அவர் இருந்துள்ளார். மேலும், இத்தனை ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்த அவர் சரியாக 30 வயது ஆனதும் பல ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்தபடியே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போலீசார் தகவல்: இது குறித்து போலீஸ் உதவி ஆணையர் தைஷீல் யெவாலே கூறுகையில், "ஹீரா நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் ரத்தத்தில் தோய்ந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. 2016இல் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி துப்பாக்கி லைசென்ஸ் வாங்கியுள்ளார். அந்த துப்பாக்கியும் அவர் உடலுக்கு அருகில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த துப்பாக்கியைக் கொண்டே அவர் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும், அங்கே ஒரு கடிதத்தையும் நாங்கள் கண்டுபிடித்தோம்.. அதில் அவர் அவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும், இதற்கு யாரும் காரணம் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இந்தியில் அந்த கடிதம் இருந்தது. மொத்தம் ஏழு பக்கத்திற்கு அவர் கடிதத்தை எழுதியுள்ளார். இதில் இருக்கும் கருத்துக்களைப் பார்க்கும் போது, அவர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருந்ததை போலத் தெரிகிறது.
30 வயது: அந்தக் கடிதத்தில் அவர், 30 வயது வரை மட்டுமே வாழ்வேன் என்று 8,9 ஆண்டுகளுக்கு முன்பாகவே முடிவு செய்ததாக எழுதியுள்ளார். அதேநேரம் அவர் தனது கடித்ததில் வாழ்க்கையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அதில் பல விஷயங்கள் குறித்தும் அவர் பேசியுள்ளார். இது குறித்து அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வருகிறோம்" என்றார்.
அந்த கடிதத்தில் அவர் 30 வயது வரை மட்டுமே வாழ வேண்டும் என்பது தனது தனிப்பட்ட முடிவு எனக் குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்தில் இருப்பார், குறிப்பாகத் தனது தாய் உயிரிழக்கும் முன்பே தான் மறைந்துவிட வேண்டும் என்று நினைப்பதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த அந்த நபர் கடந்தாண்டு படுகொலை செய்யப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் தீவிர ரசிகர் என்பதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications