அவதூறு வழக்கு: நேரில் ஆஜராகாத கெஜ்ரிவால், சிசோடியாவுக்கு ரூ.2,500 அபராதம்
டெல்லி: அவதூறு வழக்கில் ஆஜராக தவறியதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியாக ஆகியோருக்கு தலா ரூ.2,500 அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் கபில் சிபலின் மகனான வக்கீல் அமித் சிபல் தனது அப்பாவின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வழக்குகளில் ஆஜராவதாக ஆம் ஆத்மி கட்சியினர் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தனர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமித் சிபல், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, பிரசாந்த் பூஷண், சாஜியா இல்மி ஆகியோர் மீது டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டு இருந்தார்.
இதற்கிடையே இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஆம் ஆத்மி தலைவர்கள் 4 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், கடந்த ஜனவரி 16-ந்தேதி அம்மனுவை நிராகரித்த டெல்லி ஹைகோர்ட், வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் அவர்களுடைய கோரிக்கையை பரிசீலிக்குமாறு விசாரணை கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. ஹைகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து அமித் சிபல் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.
இந்நிலையில், நேற்று மாஜிஸ்திரேட் சுனில்குமார் சர்மா முன்னிலையில் அமித் சிபல் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசாந்த் பூஷண், சாஜியா இல்மி ஆகியோர் ஆஜர் ஆனார்கள். ஆனால் கெஜ்ரிவாலும், சிசோடியாவும் ஆஜராகவில்லை.
தான் பெங்களூரில் தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் 15-ந்தேதி (நேற்று) கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் ஏற்கனவே கோர்ட்டின் அனுமதியை கேட்டு இருந்தார். இதேபோல், தான் அமேதி தொகுதிக்கு சென்று இருப்பதால் தனக்கும் ஒரு நாள் விலக்கு அளிக்க வேண்டும் என்று சிசோடியா கேட்டு இருந்தார்.
கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவின் கோரிக்கையை நேற்றைய விசாரணையின் போது ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட், வழக்கு செலவாக தலா ரூ.2,500 செலுத்துமாறு அவர்கள் இருவருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பிரசாந்த் பூஷணும், சாஜியா இல்மியும் வழக்கு விசாரணையின் போது ஒவ்வொரு முறையும் ஆஜராவார்கள் என்ற உறுதியளித்ததன் அடிப்படையில் ஜாமீன் பத்திரம் இன்றி அவர்களை விடுவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் ஏப்ரல் 19-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.