முதியோர் இல்லம் கட்டப் போவதாக கூறிய பேஸ்புக் நண்பர்... ரூ 1.3 கோடி ஏமாந்த டெல்லி பெண்!
டெல்லி: முதியோர் இல்லம் கட்டுவதாக கூறி, டெல்லிப் பெண்ணிடம் ரூ 1.3 கோடியை அபகரித்துச் சென்ற பேஸ்புக் நண்பரையும், அவரது கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லியிலுள்ள ராம் விகார் பகுதியை சேர்ந்தவர் பீனா போர் தாகூர். இவரது கணவர் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யில் உயரதிகாரியாக பணி புரிந்து வருகிறார். சமூக சேவையில் ஆர்வமுடைய பீனா, பேஸ்புக் பிரியையும் கூட.
இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் பேஸ்புக் மூலமாக பீனாவிற்கு ரிச்சர்டு ஆண்டர்சன் என்ற நண்பர் கிடைத்துள்ளார். பேஸ்புக் வாயிலாக இருவரும் பேசிக் கொண்டதில், இந்தியாவில் உள்ள ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய விரும்புவதாகவும், அதற்காக பல திட்டங்களை தயாராக வைத்திருப்பதாகவும் பீனாவிடம் தெரிவித்திருக்கிறார் ஆண்டர்சன்.
ஆண்டர்சனின் உள்நோக்கத்தைப் பற்றி அறியாத பீனா, இத்திட்டத்தை வரவேற்றுள்ளார். தீவிர ஆலோசனைக்குப் பிறகு டேராடூனில் ரூ.9 கோடி செலவில் முதியோர் இல்லம் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்றும், அதற்காக ரூ.9 கோடி தருவதாகவும் ஆண்டர்சன் பீனாவிடம் கூறியுள்ளார்.
ஆனால், ரூ. 9 கோடியைப் பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும், அதற்கு முதலில் வரிப்பணமாக ரூ.1.30 கோடியை வங்கியில் செலுத்துமாறும் ஆண்டர்சன் பீனாவை வற்புறுத்தியுள்ளார். இதை நம்பிய பீனாவும் ரூ.1.30 கோடி பணத்தை பல்வேறு வங்கிகளின் (25) கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளார்.
அதன்பிறகு, பீனாவுக்கு வில்லியம் ஜார்ஜ் மற்றும் கெவின் பிரவுன் என்ற அறிமுகமில்லாத இருவரிடமிருந்து போன் வந்துள்ளது. ஆனால், அதற்கு பின் ஆண்டர்சன் உள்பட யாரிடமிருந்தும் எந்த தகவலும் பீனாவிற்கு வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பீனா, இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். பீனா டெபாசிட் செய்த வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த போலீசார் அவரை ஏமாற்றிய ஆண்டர்சன், ஜார்ஜ், பிரவுன் மற்றும் அவர்களது கூட்டத்தில் இருந்த மற்றொரு நபர் மீதும் ஐ.பி.சி. 420 பிரிவின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications